Asianet News TamilAsianet News Tamil

ஆஃப்கானிஸ்தானை விட மோசமான நிலையில் இருக்கும் இலங்கைக்கு இந்த இந்திய அணி போதும்..!

2ம் தர அணியை இலங்கைக்கு இந்தியா அனுப்பியதாக விமர்சித்திருந்த இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்காவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
 

aakash chopra retaliation to arjuna ranatunga about sri lanka vs india series
Author
Chennai, First Published Jul 4, 2021, 6:07 PM IST

விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோர் அடங்கிய மெயின் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. 

அதனால் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார். 

வரும் 13ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா - இலங்கை இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா வலுவான அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, 2ம் தர அணியை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், இது இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானம் என்றும் இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா விமர்சித்திருந்தார்.

ரணதுங்காவின் விமர்சனத்துக்கு, அப்படியெல்லாம் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியமே விளக்கமளித்திருந்தது. இந்நிலையில், இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, இந்தியா இலங்கைக்கு அனுப்பியிருப்பது முதன்மை அணி கிடையாது. பும்ரா, ஷமி, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த அணியில் கிடையாது. ஆனாலும் இந்தியா அனுப்பியிருப்பது பி கிரேட் அணியா? இந்திய உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் மொத்தமாக 471 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள். இலங்கை வீரர்களின் ஒட்டுமொத்த ஒருநாள் போட்டி எண்ணிக்கையை தெரிந்துகொள்ளவும்  நேரடியாக இரு அணிகளின் அனுபவத்தை ஒப்பிட்டால் கிடைக்கு முடிவையும் தெரிந்துகொள்ள சுவாரஸ்யமாக இருக்கும். 

டி20 உலக கோப்பைக்கு ஆஃப்கானிஸ்தான் கூட நேரடியாக ஆட தகுதிபெற்றுள்ளது. ஆனால் இலங்கை அணி தகுதிப்போட்டியில் ஆட வேண்டியுள்ளது. இதுதான் எதார்த்தம்.  இலங்கை கிரிக்கெட் மோசமான நிலையில் உள்ளது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios