டி20 உலக கோப்பை தொடங்கும் முன்பாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 4 வீரர்கள்..!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் நெட் பவுலர்களாக எடுக்கப்பட்ட 4 வீரர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. இந்திய அணி நாளை முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. விராட் கோலி தலைமையில் முதல் முறையாக உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அதிரடியான பேட்டிங், மாயாஜால ஸ்பின்னர் உட்பட தரமான ஸ்பின் பவுலிங் மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலிங் என நல்ல வலுவான மற்றும் பேலன்ஸான அணியை கொண்டுள்ள இந்திய அணிக்கு, தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது கூடுதல் பலம்.
இந்திய அணி வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசுவதற்கென்று சில பவுலர்கள் நெட் பவுலர்களாக எடுக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஐபிஎல் முடிந்ததில் இருந்து இந்திய வீரர்களுக்கு வலையில் பந்துவீசி வந்தநிலையில், உலக கோப்பை தொடர் தொடங்கிய பிறகு, அதிகமான வலைப்பயிற்சி இருக்காது என்பதால், 4 நெட் பவுலர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க - இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி வெல்லும்? டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும்? டேனிஷ் கனேரியா அதிரடி
கரன் ஷர்மா, ஷபாஸ் அகமது, வெங்கடேஷ் ஐயர் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய 4 பேரும் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். வரும் நவம்பர் 4ம் தேதி தொடங்கும் உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆடுவது அவர்களுக்கு மேட்ச் பிராக்டீஸாக அமையும் என்பதால், அவர்கள் நால்வரும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்.