இந்தியாவில் உள்ள மிகவும் புனிதமான தலங்களில் ஒன்று அமர்நாத் குகை கோவில். ஆண்டின் சில குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் இந்த இயற்கை பனி லிங்க குகை கோவில், மனிதர்களின் அறிவிற்கும், அறிவியலுக்கும் எட்டாத பல ரகசியங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கியதாகும்.

இமயமலையின் மலைத் தொடரில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 13,500 அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை, வெறும் ஆன்மீகத் தலம் மட்டுமல்ல; அது இயற்கையின் ஒரு மாபெரும் அதிசயம். அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கடினமான பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஆனால், நாம் வழக்கமாக கேள்விப்படும் கதைகளைத் தாண்டி, இந்த குகையினுள் ஒளிந்திருக்கும் சில சுவாரஸ்யமான மற்றும் அறிவியல்பூர்வமான உண்மைகள் பலருக்குத் தெரிவதில்லை.

குகை கண்டறியப்பட்ட வரலாறு:

அமர்நாத் குகையை ஒரு இந்து முனிவர் கண்டறிந்ததாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், நவீன வரலாற்றின் படி, 1850-ஆம் ஆண்டு பூட்டா மாலிக் என்ற முஸ்லிம் இடையர் தான் இந்தக் குகையை மீண்டும் உலகிற்கு அடையாளம் காட்டினார். ஒரு துறவி அவருக்கு வழங்கிய நிலக்கரி பை, வீட்டிற்குச் சென்று பார்த்த போது தங்கமாக மாறியிருந்ததாம். அந்தத் துறவியைத் தேடி மீண்டும் மலைக்குச் சென்ற போதுதான் இந்த அதிசயப் பனி லிங்கத்தைக் கண்டார் பூட்டா மாலிக். இன்றும் அவரது வம்சாவளியினர் இந்த ஆலயத்தின் வருமானத்தில் ஒரு பகுதியை மரியாதையாகப் பெற்று வருகின்றனர் என்பது மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

வியக்க வைக்கும் பனி லிங்கம் :

அமர்நாத் லிங்கத்தின் மிக வியப்பான அம்சம், அதன் வடிவம் நிலவின் வளர்பிறை மற்றும் தேய்பிறைக்கு ஏற்ப மாறுவதுதான். பௌர்ணமி அன்று லிங்கம் முழு வடிவம் பெற்று சுமார் 10 அடி உயரம் வரை வளர்கிறது. அதே சமயம் அமாவாசை நெருங்க நெருங்க அதன் அளவு குறைந்து கொண்டே வருகிறது. சுற்றியுள்ள மற்ற பனிக்கட்டிகள் உருகினாலும், இந்த லிங்கம் மட்டும் நிலவின் சுழற்சிக்கு ஏற்ப உருமாறுவது இன்றும் விஞ்ஞானிகளுக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

அழியாத புறாக்கள் :

இந்தக் குகையில் நிலவும் உறைய வைக்கும் குளிரில் எந்த உயிரினமும் வாழ்வது கடினம். ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு ஜோடி வெள்ளைப்புறாக்கள் இந்தக் குகையில் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. சிவன் பார்வதிக்கு 'அமரத்தவம்' (பிறப்பற்ற நிலை) பற்றிய ரகசியத்தை உபதேசித்தார். இதை யாரும் அறியக் கூடாது என்பதற்காக தன்னுடன் இருக்கும் நந்தி, பாம்பு போன்றவற்றை விட்டு விட்டு, யாரும் இல்லாத குகைக்கு பார்வதியை அழைத்துச் சென்றார். அவர் அமரத்துவ ரகசியத்தை சொன்ன போது, இந்த இரண்டு புறாக்களும் அதை ஒட்டுக் கேட்டு விட்டதாகவும், அதனால் அவற்றுக்கு மரணமே கிடையாது என்பதும் ஐதீகம். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த புறாக்கள் மரணம் இன்றி, இந்த குகையில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இன்றும் பல பக்தர்கள் இந்தப் புறாக்களைத் தரிசிப்பதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.

குகையின் அமைப்பு மற்றும் புவியியல் :

இந்தக் குகை சுமார் 150 அடி உயரமும், 90 அடி அகலமும் கொண்டது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், குகையின் கூரையிலிருந்து நீர் சொட்டுச் சொட்டாக விழுந்து தரையில் பனியாக உறைகிறது. இது கீழிருந்து மேலாக வளரும் 'Stalagmite' வகையைச் சேர்ந்தது. ஆனால், மற்ற குகைகளில் சுண்ணாம்பு நீர் படிவங்கள் உருவாவதைப் போலன்றி, இங்கே தூய்மையான பனி மட்டுமே லிங்கமாக உருவெடுப்பது தனிச்சிறப்பு. அதனால் தான் இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் மிக கடினமான யாத்திரை மேற்கொள்கிறார்கள்.

யாத்திரை செல்பவர்கள் கவனத்திற்கு :

- அமர்நாத் யாத்திரை என்பது உடல் வலிமையை விட மன வலிமை அதிகம் தேவைப்படும் ஒரு பயணம். - ஆக்சிஜன் அளவு: உயரம் அதிகரிக்க அதிகரிக்க ஆக்சிஜன் அளவு குறையும் என்பதால், மூச்சுப் பயிற்சி செய்திருப்பது அவசியம். - பஹல்காம் மற்றும் பால்டால் என இரண்டு பாதைகள் உள்ளன. பால்டால் பாதை செங்குத்தானது. ஆனால் குறுகியது; பஹல்காம் பாதை நீண்டது ஆனால் இயற்கை எழில் கொஞ்சும் அழகானது. - அமர்நாத் யாத்திரை செல்வதற்கு கண்டிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். - 2026ம் ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை முன்பதிவு தற்போது துவங்கி உள்ளது. இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் துவங்கி, செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.