புதுச்சேரி அருகே ஆரோவில் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது கடல் அலையில் சிக்கிய இரண்டு கல்லூரி மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் வேலாண்டிபாளையம் பகுதியில் இருந்து சுற்றுலா செல்வதற்காக 15 பேர் நேற்று முன் தினம் ரயில் மூலம் பாண்டிச்சேரி வந்துள்ளனர். பெரிய முதலியார் சாவடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினர். நேற்று நண்பகல் 1 மணியளவில் ஆரோவில் பகுதியில் உள்ள கடலில் குளிக்கச் சென்றனர். அப்போது மிதுன்(20) மற்றும் மகாவிஷ்ணு (20) ஆகியோர் கடலின் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் சீற்றத்தின் காரணமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அருகில் இருந்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கோட்டகுப்பம் காவல்துறையினர் மீனவர்களின் உதவியுடன் மிதுன் மற்றும் மகாவிஷ்ணுவின் சடலங்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் புதுச்சேரி அருகே தமிழக பகுதியான தந்திராயன் குப்பம் கடல் பகுதியில் மீனவர்கள் தேடுதலின்போது மாணவர்களின் சடலங்கள் மிதந்துள்ளன. 

மாணவர்களின் உடல்களை கைப்பற்றிய கோட்டகுப்பம் போலீசார் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மிதுன் மற்றும் மகாவிஷ்ணு இருவரும் கோயம்புத்தூரில் உள்ள தனியார் (SNMB) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.