சமவெளியில் பயிரிடப்படும் வகையில் புதிய வகை மிளகு செடியை புதுச்சேரியைச் சேர்ந்த பெண் வேளாண் விஞ்ஞாணி கண்டுபிடித்துள்ளார். ஆறே மாதத்தில் பணம் பார்க்கும் மிளகுச் செடியால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

புதுச்சேரி கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேளாண் விஞ்ஞானி லட்சுமி. தோட்ட பயிர்களில் பல உயரங்களை கண்டறிந்து நவீன வேளாண்மையில் பல புதுமைகளை புகுத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக அவரின் தந்தையும் பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் அறிஞரமான வெங்கடா பதியும் ஆலோசனை வழங்கி வருகிறார்.

அவரது வழிகாட்டுதலின் படி மலை பிரதேசங்களில் மட்டும் விளையக்கூடிய மிளகு ரகங்களை, சமவெளி பகுதிகளில் பயிரிடும் வகையில் புதிய ரகத்தை பெண் வேளாண் விஞ்ஞானி லட்சுமி கண்டுபிடித்துள்ளார். சமவெளிகளில் கொடியாகவும் செடியாகவும் அதிக மகசூல் தரும் புதிய மிளகு ரகத்தை கண்டறிந்து அனைத்து பருவங்களிலும் பயிரிடும் வகையில் லட்சுமி அறிமுகம் செய்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



இதற்காக கூடப்பக்கத்தில் உள்ள தனது பண்ணை தோட்டத்தில் புதிய மிளகு ரகங்களை பதியம் போட்டு உள்ளார். வழக்கமான மிளகுக் கொடிகள் 40 அடி உயரம் வரை வளரும் 25 அடிக்கு பிறகு தான் மிளகு காய்க்கும். மேலும் அதற்கு நான்கு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

சமவெளி மிளகு செடி

மிளகு சமவெளி பகுதிகளில் பயிரிடும் வகையில் செடிகளுக்கு இலை வழியாக நுண்ணூட்ட சத்துக்களை வழங்க வேண்டும். அதிகபட்சம் 12 அடி உயரம் வளரும் புதிய ரக மிளகு செடிகளை கீழே இருந்து அறுவடை செய்யலாம். இந்த கொடிகள் கிளைகளாக பரவாமல் ஒரே நேராக வளர்ந்து செல்வதால் கொத்து கொத்தாக அதிக காய்கள் பிடிக்கும்.

செடியின் அடிப்பகுதியில் இருந்து மேல் பகுதி வரை காய்கள் இருக்கும் ஒரு கிலோ பச்சை மிளகு காய்களை அறுவடை செய்து காய வைத்தால் 300 கிராம் காய்ந்த மிளகு கிடைக்கும் என்கிறார் வேளாண் விஞ்ஞானி லட்சுமி.

மிளகு செடி!

  • இந்த புதிய தொழில்நுட்பத்தில் அறுவடையான 40% செலவை குறைக்க முடியும்
  • ஒரு ஏக்கரில் 2700 செடிகளை நடவு செய்யலாம்.
  • அதிகபட்சம் 5 அடி உயரத்திலேயே இந்த செடிகள் வளர்ந்து காய் காய்க்கும்.
  • இந்த மிளகு செடிகள் ஆண்டு முழுவதும் காய்க்கும் திறனுடையது.
  • ஒரு செடி நடவு செய்த 6 மாதங்களில் காய் காய்க்க தொடங்கும்.
  • மூன்றாவது ஆண்டில் ஒன்றை கிலோவில் தொடங்கி மூன்று கிலோ வரை மிளகு காய்க்கும்.