ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்டதற்கு கோயில் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்கள் யாரும் ஜாகிர் உசேனை தடுக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமியர் என்பதற்காக நடன கலைஞர் ஜாகிர் உசேன் அவமானப்படுத்தப்பட்டிருந்தால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புகழ் பெற்ற பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பரத நாட்டிய கலைஞராகவும், சிறந்த வைணவ சொற்பொழிவாளராகவும் இருப்பவர். மத்திய அரசின் சமூக நல்லிணக்க விருது, கலைமாமணி விருது, நாட்டிய செல்வன் விருது என பல்வேறு விருதுகளை அள்ளி குவித்துள்ளார். நேற்று முன்தினம் நண்பகல் திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கே இருந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் அவரை மதத்தின் பெயரை சொல்லி புண்படுத்தும் வார்த்தைகளை சொல்லி கோயிலில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்.

நம்பிள்ளை ஏடு சொன்ன இடத்தில் ஜாகீர் உசேன் பார்த்து சத்தம் போட ஆரம்பித்த ரங்கராஜன் நரசிம்மன், ரங்கா மண்டபம் வரையில் விடவில்லை. வெளியே போடா, கொலை பண்ணிடுவேன் என்று சத்தம் போட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். வேறு வழியேதும் தெரியாத ஜாகீர் உசேனும் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். இதனால், ரத்த அழுத்தம் அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் வீடு திரும்பினார். இதனையடுத்து, தமக்கு ஏற்பட்ட அவமானத்தை அவர் முகநூல் பதிவில் போட்ட பின்னர் தான் இந்த விவகாரம் வெளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து, ஜாகீர் உசேன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- நான் என் தாய்வீடாக கருதும், நாள்தோறும் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றி தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதி கொண்டு இருக்கும் திருவரங்கத்தில் இருந்து மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். காரணம் என் பெயர். முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகபெரும் சமூகமே பார்த்து கொண்டிருக்க அரங்கனை காண தடை செய்யப்பட்டு பல அவமானங்களுக்கு இடையே துரத்தப்பட்டேன். இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும், ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. காலம் திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஓருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்கு துணை என்று பதிவிட்டு உள்ளார்.

மேலும், இஸ்லாமிய பெற்றோருக்கு நான் பிறந்தேன். என்னுடைய பெரியப்பாவுக்கு குழந்தை இல்லை. ஆகையால் என்னை தத்து கொடுத்துவிட்டனர். என் பெரியப்பா இந்து நாயுடு சமூகத்தை சேர்ந்த அலமேலு மங்கா என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். அவர் பெரிய பெருமாள் பக்தர். அவரின் தாக்கம் தான் பெருமாளை வணங்க வைத்தது. பரத நாட்டியன் கற்றுக் கொண்டு ஆடுகிறேன். இந்து மத நம்பிக்கைகளுடன் இருக்கும் என்னை தடுப்பது எப்படி சரி? ஆண்டவன், பக்தன் இருவருக்கும் இடையில் நிற்க ரங்கராஜன் யார்? ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியாருக்கு சன்னதி இருக்கிறது. பெருமாளுக்கு லுங்கி கட்டி ரொட்டியை நைவேத்தியம் செய்கின்றனர். பெருமாள் இஸ்லாமியர்களை ஏற்கும் போது என்னை ஏன் தடுக்கிறார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் ஜாகீர் உசேன். அவரின் இந்த பதிவுக்கு பின்னரே ஸ்ரீரங்கம் கோயிலில் ஜாகீர் உசேனுக்கு ஏற்பட்ட அவமானம் வெளியே தெரிந்திருக்கிறது. 

இதனிடையே ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்டதற்கு கோயில் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்கள் யாரும் ஜாகிர் உசேனை தடுக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இஸ்லாமியர் என்பதற்காக நடன கலைஞர் ஜாகிர் உசேன் அவமானப்படுத்தப்பட்டிருந்தால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.