வெங்கைய நாயுடுவை தாறுமாறாக விமர்சித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி.. அவையில் பகிரங்க மன்னிப்பு..
ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவை தரக்குறைவாக விமர்சித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி தனது அவையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.
ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவை தரக்குறைவாக விமர்சித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி தனது அவையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். அவரது பேச்சை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டித்ததுடன், அதை அவை குறிப்பில் இருந்து நீக்கினார். இந்நிலையில் எம்பி விஜய் சாய் ரெட்டி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வெங்கையா நாயுடுவிடம் மன்னிப்பு கோரினார்.
2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக ராஜ்ய சபாவில் நடந்த விவாதத்தின்போது ததேகூ பாராளுமன்ற உறுப்பினர் கனகமெதல ரவிக்குமாருக்கு எதிராக நடவடிக்கை கோரும் போது மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை அவமதிக்கும் வகையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி விமர்சித்தார். இதற்கு அவையிலிருந்த பாஜக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். உடனே விஜய் சாய் ரெட்டி தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என முழக்கமிட்டனர். இந்நிலையில் விஜய் சாய் ரெட்டி தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், மாநிலங்களவைத் தலைவர் மீது தனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. மாநிலங்களவை தலைவர் குறித்து எனது ஆட்சேபகரமான கருத்துக்களை வாபஸ் பெறுகிறேன், எனது நோக்கம் அவரை அவமதிக்க வேண்டும் என்பது அல்ல, நேற்று நான் கோபமான நிலையில் இருந்தேன், நான் எனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன், எனது வார்த்தைக்காக நான் மிகுந்த வருத்தப்படுகிறேன், இனி மேல் இது போன்று நிகழாது என்று சபைக்கு நான் உறுதியளிக்கிறேன், என அவர் மன்னிப்பு கோரினார். இதற்கு பதிலளித்துப் பேசிய அவைத்தலைவர் வெங்கைய நாயுடு, இந்தப் பிரச்சினையை இத்துடன் முடிவடைகிறது என பிரச்சனை முடித்து வைத்தார்.