அண்ணாமலைக்கு புத்தகம் கொடுக்க கமலாலயம் செல்வதை இளம் சிறுத்தைகள் தவிர்க்க வேண்டும். திருமாவளவன் வலியுறுத்தல்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அண்ணல் அம்பேத்கரின் புத்தகம் வழங்குவதாக இளம் சிறுத்தைகள் எவரும் பாஜக தலைமை அலுவலகம் செல்வதை தவிர்க்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அண்ணல் அம்பேத்கரின் புத்தகம் வழங்குவதாக இளம் சிறுத்தைகள் எவரும் பாஜக தலைமை அலுவலகம் செல்வதை தவிர்க்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகளின் இளம் சிறுத்தைகள் பாசறை மாநிலச் செயலாளர் சங்கத்தமிழன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அம்பேத்கர் குறித்து உரையாட தயார் என்றும், அதற்காக கமலாலயம் சென்று அவருக்கு புத்தகம் வழங்க உள்ளதாகவும் அறிவித்த நிலையில் திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழகத்தில் பாஜகவுக்கு விடுதலைச் சிறுத்தைகளுக்குமான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதியுள்ளார். இது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. சட்டமேதை யுடன் மோடியை ஒப்பிடலாமா, வைரமும் உப்புக்களும் ஒன்றா என பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுவதால் தவறு என்ன இருக்கிறது? அம்பேத்கரை ஆதரித்தது ஆர்எஸ்எஸ்தான், ஆர்எஸ்எஸ்சை பாராட்டி அம்பேத்கர் கூறிய கருத்துக்களை மேற்கோள் காட்டி அதுதொடர்பாக விவாதிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தயாரா என அண்ணாமலை சவால் விடுத்தார்.
அண்ணமலை அரசியலில் தனக்கு ஒரு சப் ஜூனியர், வேண்டுமென்றால் அவருடன் விவாதிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஒரு சப் ஜூனியரை அனுப்பி வைக்கிறேன் என அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்தார். இந்நிலையில்தான் விடுதலைச்சிறுத்தைகளின் இளம் சிறுத்தை பாசறையின் மாநிலத் செயலாளர் சங்கத்தமிழன் அம்பேத்கர் ஆர்எஸ்எஸ் குறித்து கூறியது தொடர்பாக அண்ணாமலையுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். எனவே இதுதொடர்பாக அண்ணாமலைக்கு ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை கொடுக்க கமலாலயம் செல்ல உள்ளேன் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் பாஜக அண்ணாமலைக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் இந்துத்துவ புதிர்கள் எனும் புத்தகத்தை வழங்கிட விடுதலை சிறுத்தை கட்சியினர் இளம் சிறுத்தைகள் பாஜக அலுவலகம் செல்வதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து ஏற்கனவே சங்கத்தமிழனிடம் கூறியுள்ளேன். இதுவரை அவர் 20 ஆயிரம் புத்தகங்களை படித்திருக்கிறார் என்ம்போது அவற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் நூல்களும் இருக்கலாம். எனினும் அவருக்கு தேவையெனில் அம்பேத்கரின் நூல்களை அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்போம். அல்லது அவர் அம்பேத்கர் மணி மண்டபத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளட்டும் என பதிவிட்டுள்ளார்.