- Home
- Politics
- ஆட்சியே வேண்டாம்... கட்சி போதும்..! எடப்பாடியின் வில்லங்க வியூகம்..! உச்சகட்ட கோபத்தில் அமித் ஷா..!
ஆட்சியே வேண்டாம்... கட்சி போதும்..! எடப்பாடியின் வில்லங்க வியூகம்..! உச்சகட்ட கோபத்தில் அமித் ஷா..!
ஜெயலலிதா காலத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகளுக்கு கட்சியில் இருந்து பணம் வழங்கப்படும். ஆனால், தற்போது அதிமுகவில் வேட்பாளராக போட்டியிடுவதற்கே ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா ரூ.15 கோடி வரை கேட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

தமிழக அரசியலில் தற்போது எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் இடையிலான "ரகசிய உடன்பாடு" குறித்த விவாதங்கள் அனல் பறக்கின்றன. அதிமுகவின் வீழ்ச்சியும், திமுகவின் நிதானமான போக்கும் பல்வேறு அரசியல் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
இதுகுறித்து உள்விவகாரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட அதிமுக சீனியர் ஒருவர், ''2021 சட்டமன்றத் தேர்தலின் போது, "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் சிறையிலடைக்கப்படுவார்கள்" என்று மு.க.ஸ்டாலின் மேடைதோறும் முழங்கினார். ஆனால், ஐந்து ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் இந்த வழக்கு ஆமை வேகத்திலேயே நகர்கின்றன.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் போன்றவர்கள் மீது திமுக ஆட்சியில் ஊழல் வழக்குகள் பாய்ந்தாலும், எடப்பாடி பழனிசாமி மீதான நேரடி நடவடிக்கைகள் பெரிய அளவில் இல்லை என்பது ரகசிய டீல் குற்றச்சாடுகளுக்கு வலு சேர்க்கிறது. சில வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதும், கொடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க அரசு தயக்கம் காட்டுவதும் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. அதிமுகவை மீண்டும் ஒரு வலிமையான சக்தியாக மாற்ற வேண்டுமானால், பிரிந்து சென்ற ஓ.பி.எஸ், சசிகலா, செங்கோட்டையன் போன்றவர்களை இணைக்க வேண்டும் என்பது பாஜக மேலிடத்தின் விருப்பமாக இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இதனைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ஆட்சி அதிகாரத்தை விட, அதிமுக எனும் கட்சி மட்டும் தன் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். தேமுதிக மற்றும் பிற சிறிய கட்சிகளை அரவணைத்துச் செல்வதில் எடப்பாடி காட்டிய பிடிவாதம், ஒரு வலுவான மெகா கூட்டணியை அமைக்கும் வாய்ப்பைச் சிதைத்துவிட்டது.
ஆகையால் இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறட்டும் என விட்டுக் கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் உள்ளன. பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்து, அதிமுக பலமாகி வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. அதனை தவிர்க்கவே பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ், சசிகலா, வைத்திலிங்கம், செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன் போன்றவர்களை எல்லாம் எடப்பாடி பழனி சாமி சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்.
இவர்களை இணைத்துக் கொண்டால் அதிமுக வலிமையாகி வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி அதை தவிர்த்து விட்டார். அதற்கேற்றாற்போல இவர்களும் திமுக, தவெக போன்ற மாற்றுக் கட்சிகளில் இணைந்து விட்டனர். கூட்டணிக்குள் பிற கட்சிகளை கொண்டுவர அந்த கட்சிகளுக்கு கொடுக்க டெல்லி பாஜக எடப்பாடி பழனிசாமியிடம் ரூ.2000 கோடி கொடுத்துள்ளது. அதனை செலவிடாமல் அப்படியே பதுக்கிக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அவர் முதலமைச்சராக இருந்த கடைசி காலகட்டத்தில் பல தொழில் அதிபர்கள், நிறுவனங்களிடம் இருந்து சில சலுகைகளை செய்து தருவதாக ரூ.5000 கோடி முதல் 10 ஆயிரம் கோடி வரை பெற்றுள்ளார். தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் அதை சலுகையாகவோ, பணமாகவோ கேட்பார்கள் என்பதும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக விரும்பாததற்கு ஒரு முக்கிய காரணம்.
பாஜகவின் பிரதான எதிரி திமுக. ஆனால், எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு எதிராகப் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்காமல், அறிக்கைகளுடன் நிறுத்திக் கொள்வது பாஜகவுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 6 மாதங்களுக்கு முன்பே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தேர்தல் நெருங்கும் தற்போது எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தையே நிறுத்தி விட்டார்.
ஜெயலலிதா காலத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகளுக்கு கட்சியில் இருந்து பணம் வழங்கப்படும். ஆனால், தற்போது அதிமுகவில் வேட்பாளராக போட்டியிடுவதற்கே ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா ரூ.15 கோடி வரை கேட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவரது உள்ளடி வேலைகளால் அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறது டெல்லி பாஜக தலைமை. எடப்பாடி பழனிசாமி கட்சியை வைத்து சம்பாதித்து விட்டு அதிமுகவை மட்டும் சொந்தமாக்கிக் கொண்டால் போதும் என்கிற முடிவில் இருக்கிறார். ஆனால் அதிமுக இந்த முறை தோற்றால் அதற்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்.
ஆகையால் தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமி - பாஜக தலைமைக்கு இடையிலான உறவு, தற்போது ஒரு "பனிப்போர்" கட்டத்தைத் தாண்டி பகிரங்கமான அதிருப்தியை எட்டியுள்ளது. அமித் ஷா மற்றும் டெல்லி மேலிடம் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்'' என அவர் கூறினார்.
