தமிழ்நாடு அரசு கேட்காமலேயே காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட்ட எடியூரப்பா..! வரலாற்று சம்பவம்
தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுப்பதற்கு முன்பாகவே, எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு, காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.
தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான காவிரி நீர் பிரச்னை பல்லாண்டுகளாக இருந்துவருகிறது. தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் பாசனத்திற்கு, காவிரி நீரை நம்பியிருக்கும் சூழலில், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர்ப்பங்கீட்டை, தாமாக முன்வந்து வழங்கியதில்லை.
தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தாலும், காவிரி நீரை கர்நாடக அரசு முறையாக வழங்காத நிலைதான் இதுவரை இருந்துவந்துள்ளது. காவிரி நீரை வைத்து இரு மாநில அரசியல் கட்சிகளும் அரசியல் செய்துவந்தன.
காவிரி நீர்ப்பங்கீட்டில் தமிழக அரசின் உரிமைகளை போராட்டமின்றி பெற காவிரி மேலாண்மை வாரியம் தான் ஒரே தீர்வு என்பதால், தமிழக அரசு அதற்காக நீண்டகால சட்ட போராட்டம் நடத்தி, அதில் வென்றும் காட்டியது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே நீண்ட காலமாக காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை இருந்துவரும் நிலையில், இம்முறை தமிழக அரசு கேட்காமலேயே, முதல்வர் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி கடந்த 8-ம் தேதி கர்நாடகா மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 700 கன அடியும், கபினி அணையில் இருந்து 1,300 கன அடி என மொத்தம் 2 ஆயிரம் கன அடி தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்து விட வேண்டும். அதன்படி, கர்நாடகாவில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்பு திறந்து விடப்பட்ட 2 ஆயிரம் கன அடி நீர், ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு நேற்று 1,292 கன அடி வந்த நிலையில், இன்று(14ம் தேதி) காலை நீர்வரத்து அதிகரித்து, 1,643 கன அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர் மட்டம் 100.73 அடியாக உள்ளது. அணையி்ல் நீர் இருப்பு 65.79 டிஎம்சி-யாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக உள்ளதால், அணை மட்டம் குறைந்து வருகிறது.