yaswanth sinha press meet
ஜிஎஸ்டியை ஒவ்வொரு நாளும் டிங்கரிங் செய்து வரும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா காட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை பாஜக அரசு கொண்டுவந்தது. இதற்கு பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜிஎஸ்டியால் சிறு-குறு வணிகர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து வியாபாரிகள், தொழில்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் யஸ்வந்த் சின்ஹா மத்திய அரசின் மீது புதிய தாக்குதலை தொடுத்து உள்ளார். இட ஒதுக்கீடு தொடர்பாக பீகார் மாநில முன்னாள் சபாநாயகர் உதய் நாராயண் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் யஸ்வந்த் சின்ஹா பங்கேற்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை அமலுக்கு கொண்டுவந்த போது அதனை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முழுமையாக நினைவில் ஏற்றிக்கொள்ளவில்லை என்றும், ஒவ்வொரு நாளும் டிங்கரிங் செய்து வருகிறார் என்றும் குறிப்பிட்டார்.
இதனால் அருண் ஜெட்லியை தூக்கி எறிந்துவிட்டு புதிய நிதி அமைச்சரை பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவர வேண்டும் என்றும் , இதனை முழு பொறுப்புடன் தான் கூறுவதாகவும் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவருடைய அமைச்சரவையில் யஸ்வந்த் சின்ஹா, நிதி அமைச்சராக இருந்தவர். பிரதமர் மோடி அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை ஏற்கனவே விமர்சனம் செய்து இருந்திருந்த இவர், கருப்பு பணத்தை கணக்கில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தை ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை அடையவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் புதிய வரிவிதிப்பு முறை தொடர்பாக மத்திய அரசு பொய் சொல்லி வருவதாகவும் யஸ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார்.
