இதற்கெல்லாம் குரல் கொடுக்க மாட்டீர்களா சூர்யா... ட்விட்டரில் ட்ரெண்டாகும் #JusticeForManikandan
ட்விட்டரில் மணிகண்டன் மரணத்திற்கு நீதி கேட்டு #JusticeForManikandan என்கிறா ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
உரம் வாங்கச் சென்ற மாணவர் மணிகண்டனை போலீசார் தாக்கி மரணமடைய செய்ததாக பரபரப்பு எழுந்துள்ளது.
போலீஸ் தாக்கியதில், அவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணகுமார் மகன் மணிகண்டன். 21 வயதான அவர் கோட்டைமேடு அரசு கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்கள் இருவருடன், நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு, பரமக்குடியில் இருந்து கீழத்துாவலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷன் அருகே, வாகன சோதனையில் நிற்காமல் சென்றதால், போலீசார் விரட்டியதில் இருவர் இறங்கி தப்பினர். மணிகண்டனை மட்டும் விசாரணைக்கு ஸ்டேஷன் அழைத்து சென்று, இரவு 7:30 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு வீட்டில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மணிகண்டன் உயிரிழந்தார்.
போலீசார் தாக்கியதில் தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி, முதுகுளத்துார் - பரமக்குடி சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து, கலைந்து சென்றனர். மணிகண்டன் தம்பி அலெக்ஸ் கூறுகையில், ''வீட்டிற்கு வந்த மணிகண்டன், தன்னை போலீசார் தாக்கியதாக கூறினார். போலீசார் அடித்ததில் தான் மணிகண்டன் உயிரிழந்தார். எனவே எஸ்.பி., விசாரணை செய்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்காக மணிகண்டன் வந்து செல்லும் 'சிசிடிவி' பதிவுகள் உள்ளன. 'பிரேத பரிசோதனை முடிவு வந்த பின், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
மணிகண்டன் பிறந்த நாளில் உயிரிழந்தது, உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் மணிகண்டன் மரணத்திற்கு நீதி கேட்டு #JusticeForManikandan என்கிறா ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.