20 ரூபாய் நோட்டுடன் தினகரன் அலுவலகத்தில் அலைமோதும் பெண்கள்!! வட சென்னையில் பரபரப்பு
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவான டிடிவி தினகரன் தொகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என நேற்று இரவு அப்பகுதி பெண்கள் 20 ரூபாய் நோட்டுடன் தினகரன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவான டிடிவி தினகரன் தொகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என நேற்று இரவு அப்பகுதி பெண்கள் 20 ரூபாய் நோட்டுடன் தினகரன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரம் வாக்காளர்களில் 77.68 சதவிகித வாக்குப் பதிவு நடந்தது. ஆர்.கே.நகர் வரலாற்றில் அதிகபட்ச வாக்குப் பதிவு இது!
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளராக இ.மதுசூதனன், திமுக வேட்பாளராக மருது கணேஷ், சுயேட்சையாக டி.டி.வி.தினகரன் களம் கண்டனர். ஆளும்கட்சி சார்பில் ஓட்டுக்கு 6000 வீதம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. கடைசி கட்டத்தில் தினகரன் தரப்பில் தலா 20 ரூபாய் நோட்டுகளை வழங்கிவிட்டு, தேர்தல் முடிந்ததும் அதில் உள்ள சீரியல் எண்ணை குறிப்பிட்டு ஒரு பெரும் தொகை பெற்றுக்கொள்ள உறுதிமொழி வழங்கப்பட்டதாக தகவல்கள் கிளம்பின. சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தினகரன் பெற்ற வாக்குகள் 89,013. மதுசூதனன் பெற்ற வாக்குகள் 48,306. திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 24,651. மதுசூதனன் டெப்பாசிட் இழந்தது.
இந்நிலையில் சென்னை தண்டையார் பேட்டை இரட்டைக்குழி தெருவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை 20 ரூபாயுடன் முற்றுகையிட்ட பெண்கள், தினகரன் எம்.எல்.ஏவாக இருக்க தகுதியே இல்லாதவர். தொகுதிப்பக்கமே அவர் வருவதில்லை, சாக்கடை நிரம்பி வழிகிறது இதனால் பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது, எல்லா மருத்துவமனையிலும் போய் பாருங்கள் ஆர்கே நகர் குழந்தைகள் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சொல்லியும் ஆர்பாட்டம் நடத்திய பெண்கள் 20 ரூபாய் நோட்டுகளை அலுவலகத்தில் வீசி விட்டு இனி அந்த கட்சி இந்த கட்சி என இல்லாமல், பணத்திற்காக வாக்களிக்காமல் எங்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என கூறினர்.
தினகரனின் ஆபீசில் பெண்கள் கூட்டத்தைப் பார்த்த ரோட்டில் சென்ற பொதுமக்களும் தினகரன், 20 ரூபாய் நோட்டிற்கு காசு கொடுக்கிறாரோ என நினைத்து பெண்கள் கூட்டம் அலைமோதியதாம். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.