4ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா...? தெள்ளத்தெளிவாக விளக்கிய மத்திய அரசு..!
மே 4-ம் தேதிக்கு பின்னர் நாட்டின் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் இதுதொடர்பான புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மே 4-ம் தேதிக்கு பின்னர் நாட்டின் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் இதுதொடர்பான புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்தியாவில் கடந்த மார்ச் 25-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை அடுத்து மேலும் 19 நாட்களுக்கு, ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்த பிரதமர் மோடி, மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவித்தார். ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டதன் விளைவாக, இந்தியாவில் பல மாவட்டங்களில், கொரோனா தொற்றே கிடையாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பொது முடக்கம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான ஆய்வை மேற்கொண்டது. 300 மாவட்டங்களில், கொரோனா தொற்றே கிடையாது என்ற நிலை தற்போது உள்ளது. இந்தச் சூழலில், மே 3-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைவதால், அதன் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்த்தப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஆலோசனை மேற்கொண்டது.
இந்த ஆலோசனையின் முடிவில், கொரோனா இல்லாத மாவட்டங்களில், கணிசமான அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வு தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’பொது முடக்கம் காரணமாக பல மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் பலன் வீணடைந்து விடக்கூடாது என்பதற்காக மே 3-ம்தேதி வரை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். மே 4-ம்தேதிக்கு பின்னர் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்திருந்தது. சுமார் 5 வார கட்டுப்பாடுகளுக்கு பின்னர் இந்த அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 375 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் அங்கு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலம் இல்லாத பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தெலங்கானாவில் மே 7-ம்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 94 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.