ஏன் ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது..? சட்டம், ஒழுங்கு முக்கியமா..? மக்களின் உயிர் முக்கியமா..? -உச்சநீதிமன்றம்..!
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்த நிலையில் இந்த இடைக்கால மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற்றது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதிகள், ஆக்சிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு கூறுவது தவறு சரியா? என கேள்வி எழுப்பியதோடு ஆலையை அரசே ஏற்று நடத்தலாம் என்றும் எந்த நிறுவனம் என்பது முக்கியமல்ல, மக்களின் உயிர் தான் முக்கியம் என்றும் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு அரசு தரப்பில், கடந்த 2018இல் நடந்தது போல தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்க விரும்பவில்லை. 2018ல் சம்பவம் நடந்தாலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இன்னமும் தொடர்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த காரணத்தை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் உயிர் ஆபத்தில் இருக்கும் போது ஏன் ஆலையை திறக்க கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் ஏன் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க கூடாது? ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உரிய பதிலை தமிழக அரசு அளிக்க வேண்டுமென்று விசாரணையை திங்கட் கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.