பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனல்கண்ணன் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனல்கண்ணன் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தான் பேசியதில் இந்நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது எதுவுமில்லை என்றும், ஏன் கோவிலுக்கு வெளியில் பெரியார் சிலை வைத்தவர்களை கைது செய்யவில்லை என்றும் அவர் தனது ஜாமீன் மனுவில் கேள்வியெழுப்பியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நிறைவு விழா பொதுக்கூட்டம் கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெற்றது, மதுரவாயில் நடைபெற்ற அக்கூட்டத்தில் இந்து முன்னணியின் மாநில கலைபண்பாட்டு பிரிவின் செயலாளர் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கலந்துகொண்டார் அப்போது மேடையில் பேசிய அவர், லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிற ஸ்ரீரங்கநாதர் கோவில் வாசலில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது, லட்சக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டுச் செல்லும் அந்த இடித்தில் அந்த சிலையின் கீழ் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என எழுதப்பட்டிருக்கிறது,

நான் சொல்கிறேன் எப்போது அந்த சிலை உடைக்க படுகிறதோ, அது தான் இந்துக்களின் எழுச்சி நாள் என ஆவேசமாக பேசினார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலானது, பலரும் கனல்கண்ணன் பேச்சை கண்டித்தனர், இது தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அவர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது,சமூகத்தில் இருபிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல் கண்ணன் மீதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த புகாரை அடுத்து கனல்கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் 

கலவரத்தை தூண்டுதல், அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார், ஆனால் ஆகஸ்ட் 14ஆம் தேதி அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது, முன்னதாக கைதுக்கு பயந்து புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். அதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட கனல்கண்ணன் தொடர்ந்து ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்து வருகிறார், அவரின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது,

இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார், அவரது மனுவில், நான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஒன்றுமில்லை, சிறையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் தான் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம், கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ், துரதிஷ்டவசமாக தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது என கனல்கண்ணன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த மனு வரும் திங்கட்கிழமை நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.