ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதில் தயக்கம் ஏன்? அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!!
ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் தற்கொலை செய்துக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி அதிகளவில் நடந்து வருவதாகவும், இந்த விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல ஆசையை தூண்டிவிட்டு பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் நடிகர்கள் வருவதை பார்த்து யாரும் ஏமாந்து இந்த மோசடியில் சிக்க வேண்டாம். இது ஆன்லைன் ரம்மி அல்ல மோசடி ரம்மி எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவரது மனைவி பவானி என்பவர் கந்தன் சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த மணலி புதுநகர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் வேலைக்கு ரயிலில் செல்லும் போது ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாகவும், இதற்காக தனது 20 சவரன் நகைகளை விற்றதும், தனது சகோதரிகளிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்றிருந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது. காவல்துறை டிஜிபியே ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரைக் கொல்லலாம் என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும் கூட, இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? இன்னும் எத்தனை உயிர்களை தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்? என அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.