அதிமுகவை மிரட்டும் அளவுக்கு யாருக்கு தில்லு இருக்கு..??? மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சரவெடி பேச்சு.
அதையெல்லாம் எதிர்கொண்டு வீரநடை போடும் தைரியமும், வீரமும் அதிமுக நிர்வாகிகளுக்குதான் உள்ளது. திமுகவை எதிர்க்க யாருக்கும் தயக்கம் வேண்டாம், ஒரு அதிமுக நிர்வாகிக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவருக்கு மாவட்ட கழகம் முழுவதும் துணையாக நிற்போம்,
அதிமுகவை மிரட்டும் அளவுக்கு எந்த கட்சிக்கும் சக்தி கிடையாது என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார். திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் அதிமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அதற்கு முதல் கையெழுத்து போடுவோம் என்றும் கூறினார், நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று தெரிந்திருந்தும் ஒரு பொய்யான வாக்குறுதியை கூறி வாக்குகளை பெற்றார்கள். ஆனால் சொன்னதை காப்பாற்றினார்களா என்றால் இல்லை.
அதேபோல கல்வி கட்டணத்தை ரத்து செய்வோம் என கூறினர், அதையும் செய்யவில்லை, மாணவ சமுதாயத்தை ஏமாற்றி உள்ளனர். சுயஉதவி கடன்களையும் ரத்து செய்வோம் என்றனர். இப்போது அவர்களையும் ஏமாற்றி விட்டனர். பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்றார்கள், அதன் விலையை குறைப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் அதையும் செய்யவில்லை, அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஐந்து ஆண்டுகள் மட்டும் அல்ல ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் நிறைவேற்ற முடியாது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்றார்கள், வழங்கினார்களா? இல்லையே.
இதை நாம் ஒவ்வொருவரும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அடுத்து அமையப்போவது அதிமுக ஆட்சிதான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது திமுகவில் பழிவாங்கும் நடவடிக்கை அதிகரித்துள்ளது. அதிகவினர் மீது வழக்குப் போடுகிறார்கள், ஆனால் அதையெல்லாம் எதிர்கொண்டு வீரநடை போடும் தைரியமும், வீரமும் அதிமுக நிர்வாகிகளுக்குதான் உள்ளது. திமுகவை எதிர்க்க யாருக்கும் தயக்கம் வேண்டாம், ஒரு அதிமுக நிர்வாகிக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவருக்கு மாவட்ட கழகம் முழுவதும் துணையாக நிற்போம், மொத்தத்தில் அதிமுகவை மிரட்டவே, உடைக்கவும் யாராலும் முடியாது. அதிமுகவை மிரட்டும் அளவிற்கு யாருக்கும் சக்தி இல்லை என்றார்.