ஜனாதிபதிக்கு அனுப்பிய நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் எங்கே? எந்த அமைச்சாராச்சும் கேட்டீங்களா?...
தஞ்சாவூர்
நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் எங்குள்ளது? என எந்த அமைச்சரும் கேட்கவில்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சுட்டிக் காட்டியுள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், "கும்பகோணத்தில் ஜூன் 8-ஆம் தேதி திராவிடர் கழக மாநில மாணவர் அணி மாநாடு நடக்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ரூ.10 இலட்சம், ரூ.20 இலட்சம் என இழப்பீட்டு தொகையை அறிவித்து உயிருக்கு விலை வைக்கிறார்கள்.
துப்பாக்கி சூடு நடத்துவதற்கான விதிமுறைகளை பின்பற்றவில்லை. இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். நவீன முறை என்கவுண்டர் ஆகும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தேவையில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்பார்வையில் தற்போது பணியில் உள்ள நீதிபதி மூலம் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும்.
தமிழகத்தில் மோடிக்கு எதிரான போராட்டங்கள் அதிகளவில் நடக்கின்றன. இதேநிலை நீடித்தால் தமிழகத்தில் விரைவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஏற்படும்.
தூத்துக்குடியில் போராட்டக்காரர்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளனர். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு ஜனநாயக படுகொலையாகும்.
தமிழகத்தில் கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் மக்கள் எழுச்சி போராட்டங்களில் தீவிரவாதிகள் புகுந்துள்ளார்கள் என்று கூறி மாநில அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
மத்திய அரசின் கல்வி கொள்கை, குலக்கல்வி கொள்கையை விட மோசமாக உள்ளது. கல்வித்துறை ஆர்.எஸ்.எஸ். மயமாக மாறிவிட்டது.
தமிழகத்தில் ஏற்கனவே ஆட்சி செய்தவர்கள் எதிர்த்த மத்திய அரசின் திட்டங்களை, தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் அனுமதித்து, மத்திய அரசுக்கு தலையாட்டி பொம்மையாக விளங்கி வருகிறார்கள்.
தமிழகத்தில் நடைபெறுவது மோடி ஆட்சிதான். இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் டெல்லிக்கு “எஸ்” என்று சொல்லி ஆட்சி நடத்துகிறார்கள்.
நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் எங்கு உள்ளது? என எந்த அமைச்சரும் கேட்கவில்லை.
மத்திய அரசின் கல்வித்துறை சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் எதிராக செயல்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.