போலீஸ் சங்கமாக உருமாறிய வாட்ஸ் அப் குரூப்புகள்: மோதல் பயத்தில் உறையும் உளவு போலீஸ்.
சங்கம் வைத்துக் கொள்ள அனுமதியற்ற ஒரே அரசுத்துறை என்றால் அது போலீஸ்தான். அதனால்தான் அவர்களின் உள்ளக்குமுறலையும், வேதனைகளையும் வெளியே சொல்லவும், இணைந்து போராடவும் வாய்ப்பின்றி இருந்தது.
ஆனால் தொலைதொடர்பு துறையின் ஒரு புதிய மைல் கல்லான வாட்ஸ் அப் மூலம் சற்றே தணிந்திருக்கிறது போலீஸாரின் வேதனை. அதாவது அத் துறைக்குள்ளேயே இருப்பவர்கள் வாட்ஸ் அப் குரூப்புகளை உருவாக்கி அதில் தங்களின் பிரச்னைகள், பஞ்சாயத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அவை அப்படியே பொது வெளியிலும் பகிர்பபடுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் பார்த்தால் வாட்ஸ் அப் குரூப்புகளே போலீஸாரின் அறிவிக்கப்படாத அசோஸியேசன்களாகிவிட்டன.
சமீபத்தில் சென்னை சிட்டி போலீஸ்காரர்கள் சிலரின் வாட்ஸ் அப் குரூப்பில் ஹாட்டான போலீஸ் தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவை சொல்லும் தகவல்களின்படி தமிழகத்தின் L & O டி.ஜி.பி., சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர், மற்றும் சென்னை சிட்டியின் கூடுதல் கமிஷனர்களை இடம் மாற்றம் செய்யும் கோப்புகள் முதல்வர் எடப்பாடியாரின் கையில் இருக்கிறதாம்.
ஆக அடுத்த டி.ஜி.பி. யார்? அடுத்த சி.ஓ.பி. யார்? என்று குரூப்பில் கேம் ஆடிக் கொண்டிருக்கிறார்களாம். பதவியை பிடிக்க கூடுதல் டி.ஜி.பி.யான கருணாசாகர் டெல்லி வழியே லாபி செய்கிறாராம். அதேபோல் இவரையும், தற்போது சென்னை கமிஷனராக இருக்கும் ஏ.கே.விஸ்வநாதனின் திறமைகளையும் கம்பேர் செய்து அலசல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறதாம்.
மென்மையான, எல்லோரையும் மதிக்கக்கூடிய ஏ.கே.வி. வந்த பிறகு சென்னை சிட்டிக்குள் லா அண்டு ஆர்டர் விவகாரத்தில் தகிப்பான நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டதாக சிலர் புகழ்ந்து தள்ள, சிலரோ அதை விமர்சித்துள்ளார்களாம். போலீஸ் அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷன்கள், உள்ளடி வேலைகள் ஆகியவற்றை அலசி ஆராயும் போலீஸின் வாட்ஸ் அப் குரூப்புக்குள் சில நேரங்களில் வாத விவாதங்கள் முற்றி பரஸ்பரம் காரசாரமாக சண்டையும் நடக்கிறதாம்.
ஆக அறிவிக்கப்படாத போலீஸ் சங்கமாகவே மாறிவிட்ட இந்த வாட்ஸ் அப் குரூப்புகள் விரைவில் என்னென்ன பஞ்சாயத்துகளை இழுத்து வரப்போகின்றனவோ! என்று பீதியிலிருக்கிறதாம் உளவுத்துறை.