மத்திய அரசு எதை செய்தாலும் அதனை தமிழகம் ஏற்கத்தான் வேண்டும் - உத்தரவு போடும் தமிழிசை சௌந்தரராஜன்...
நாகப்பட்டினம்
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும், மேற்பார்வைகுழு அமைத்தாலும் அதை தமிழகம் ஏற்கத்தான் வேண்டும் என்று நாகப்பட்டினத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
நாகப்பட்டினத்திற்கு தமிழக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும், மேற்பார்வைகுழு அமைத்தாலும் அதை தமிழகம் ஏற்கத்தான் வேண்டும்.
பெயர் முக்கியமில்லை. நீர் தான் முக்கியம். தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும். காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்பட மாட்டார்கள். இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
தமிழகத்தில் ஆளுநர் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் அவருக்கு தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி வருகிறார்கள். இருப்பினும் அரசியல் நாகரிகம் கருதியே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை ஆளுனர், மாளிகைக்கு வர வைத்து விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், ஈரோட்டில் நடந்த தி.மு.க. மாநாட்டில் பா.ஜனதாவை பற்றி தி.மு.க.வினர் பேசியது அவர்களுக்கு எங்கள் மீது உள்ள பயத்தை காட்டுகிறது" என்று அவர் கூறினார்.