தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் பெறுவதையும் காலம் தாழ்த்தி - அதற்காகத் திமுக ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்திடும் சூழ்நிலையை உருவாக்கிட வேண்டாம் என அதிமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்” என மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, பட்டப்படிப்பிற்கு முன்பு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளையும், 10-ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும்” என்று கடந்த மார்ச் மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டத் திருத்த மசோதாவிற்கு ஏறக்குறைய 8 மாதங்களாக, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது.
இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெற அதிமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று, சமீபத்தில் என்னைச் சந்தித்த போட்டித் தேர்வுகளுக்குப் பயிலும் மாணவர்கள் தெரிவித்தார்கள். தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வழக்கறிஞரே, 8 மாதங்களாக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறியிருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது. அத்துறைக்கான அமைச்சர் என்ன செய்கிறார்? சட்ட அமைச்சர் என்ன மாதிரி மனநிலையில் இத்தனை மாதங்களாக மசோதாவிற்கு ஒப்புதல் பெறாமல் காலம் கழிக்கிறார்? இவர்களுக்கு எல்லாம் தற்சமயம் தலைவராக இருக்கும் முதல்வர் பழனிசாமி, தமிழக அரசின் நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறாரா, இல்லையா என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

திமுக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் - தமிழ்வழியில் பயின்றோருக்குத் தமிழக அரசுப் பணியில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத்தை 2010-ஆம் ஆண்டு நிறைவேற்றி - உரிய அரசு ஆணையும் 30.9.2010 அன்றே பிறப்பித்தார். இதனால் லட்சக்கணக்கான தமிழ்வழி பயின்ற மாணவர்கள் பயனடைந்தார்கள். அரசுப் பணிகளிலும் முன்னுரிமை கிடைத்தது. நாளடைவில் இந்த இடஒதுக்கீட்டின் பயனைப் பெற ஆங்கிலவழிக் கல்வியில் பட்டப்படிப்பு பயின்ற மாணவர்களும் – அரசு வேலைக்காகப் பட்டப்படிப்பைத் தமிழில் பயின்றதாகக் கூறியதால் இந்த இடஒதுக்கீட்டின் முழுப் பயனும், “துவக்கம் முதல் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு”க் கிடைக்கவில்லை.
இந்நிலையில்தான், பட்டப்படிப்பு படித்தவர்கள் நிச்சயம் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளிலும், 10-ஆம் வகுப்புப் படித்தவர்கள் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலும் தமிழ்வழிக் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே - அரசுப் பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பயன் பெற முடியும் என்று கடந்த மார்ச் மாதம் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு - சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்குப் பயனளிக்கும் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு இவ்வளவு மாதங்களாகத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன்?

