கூட்டணி என்பதற்காக உங்கள் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.. திமுகவை அலறவிட்ட வன்னி அரசு.
திராவிட மாடல் ஆட்சி செய்வதாக கூறிக் கொள்ளும் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி மண்ணின் மைந்தர்களை அப்புறப்படுத்தும் இந்த நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் எதிர்க்கிறோம்.
கூட்டணி கட்சி என்பதற்காக உங்கள் கொடுமைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுத்துக் கொள்ளாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு எச்சரித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 256 க்கும் அதிகமான வீடுகள் இடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இளங்கோ தெருவில் 156க்கும் அதிகமான வீடுகள் இடித்து தள்ளும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து பாதிக்கப்பட்ட கண்ணையன் என்பவர் தீக்குளித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதில் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் கண்ணையன் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சித் தலைவர்கள் கண்ணையன் உடலுக்கு மரியாதை செலுத்தினர், அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு கண்ணையன் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சென்னையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறுகின்றனர், மக்களுக்கான ஆட்சி சாமானியர்களுக்கு ஆட்சி என கூறிக் கொள்கிறார்கள், ஆனால் இங்கே மண்ணின் மைந்தர்கள் நிலங்களை ஆக்கிரமித்து விட்டார்கள் எனக் கூறி அவர்களை அப்புறப்படுத்தும் வேலையில் அரசு ஈடுபட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. இந்த அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பாமக மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணையன் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதற்கு முதலமைச்சர் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். ஆனால் 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
திராவிட மாடல் ஆட்சி செய்வதாக கூறிக் கொள்ளும் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி மண்ணின் மைந்தர்களை அப்புறப்படுத்தும் இந்த நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் எதிர்க்கிறோம். இப்பிரச்சனையை சரி செய்வதற்கு அரசு கொள்கை ரீதியில் செயல்பட வேண்டும். திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்தில் நடைபெறுகின்ற இக்கொடுமைகளை கண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைதியாக இருக்காது. பள்ளி கல்லூரி மாணவர்கள் குடியிருப்புகளில் இருக்கின்றனர். தற்போது தேர்வு நடந்து வருகிறது, இதுபோன்ற சூழ்நிலையில் பொதுமக்களை அப்புறப்படுத்தும் செயல்களில் அரசு ஈடுபடுவது நல்லாட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.