எம்ஜிஆர் சிலை எரித்த திமுகவினரை சும்மாவிடமாட்டோம்.. ஸ்டாலின் பொறுப்பேற்றக வேண்டும்.. சீறும் ஓபிஎஸ்.
தலைவர்களை அவமதிக்கும் வகையில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும் வகையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுகவினர் பட்டாசு வெடித்ததில் எம்ஜிஆர் சிலை தீ பிடித்து எரிந்த சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கடுமையான கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சிலை எரிப்பு நிகழ்வு கடும் கண்டனத்துக்குரியது.
தமிழக மக்களின் வாழ்வில் மாற்றமும், ஏற்றமும் உண்டாக்கிய மாபெரும் தலைவர். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சிலை எரிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். தலைவர்களை அவமதிக்கும் வகையில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும் வகையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ஸ்டாலின் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் அவரது கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகே ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அங்கிருந்த எம்ஜிஆர் சிலை அருகில் பட்டாசு வெடித்ததில் தீ எம்ஜிஆர் சிலை மீது விழுந்து, சிலை தீ பற்றி எரிந்தது. இதை கண்ட அதிமுகவினர் கொந்தளிப்பு அடைந்தனர். உடனே அதை கண்டித்து அதிமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார், அதன் பின்னர் திமுக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், சம்பவம் குறித்து கந்திலி ஒன்றியம் திமுக பொருளாளர் நடராஜன் என்பவர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலையின் காலைத்தொட்டு வணங்கி பகிரங்க மன்னிப்பு கேட்டார். இதனால் பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிலை எரிப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஸ்டாலின் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.