பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பாஜகவுக்குச் சென்றாலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்று அத்துறையின் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் நாசர் திருவள்ளூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சிலர் கண்ணிருந்தும் குருடராகவும், காதிருந்தும் செவிடராகவும் இருப்பார்கள். அப்படி மத்திய அமைச்சர் எல்.முருகனும் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாமல் பின்வாங்குவதாகத் தெரிவித்துள்ளார். திமுக அரசின் திட்டங்களை சாதாரண மக்களும் பாராட்டுகிறார்கள். இதனால், எல்.முருகன் பொறாமை காரணமாக இதுபோன்ற கருத்துகளைக் கூறுகிறார். முந்தைய ஆட்சியில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். 
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார். எனவே யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பாஜகவுக்குச் சென்றால் மட்டும் விட்டுவிடுவோமா என்ன?” என்று நாசர் தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது பல முறைகேடு புகார்கள் கூறப்பட்டுள்ளன. அரசின் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க பாஜகவில் சேரப்போவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் பாஜகவில் சேர்ந்தால் விட்டுவிடுவோமா என்ற அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred