தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடக்க விரும்பவில்லை... உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்...!
கடந்த 2018ம் ஆண்டைப் போல் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடக்க விரும்பவில்லை என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. ஆக்ஸிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் கொத்து, கொத்தாக மடியும் அவலம் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு, மே 22-ம் தேதி மக்களின் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, ஆக்ஸிஜன் தயாரித்து தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க அனுமதி தருமாறு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: தளபதியை அடுத்து தல அஜித் படத்திற்கும் சிக்கல்... அதிரடி முடிவை ஆலோசித்து வரும் ‘வலிமை’ படக்குழு...!
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜராகி இருந்த மத்திய அரசு வழக்கறிஞர் துசார் மேத்தா கொரோனா விவகாரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆகையால், தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதி தரலாம் என தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதால் அதனை மீண்டும் திறக்க கூடாது என வாதிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என தமிழக அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக அரசின் வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி, நீங்களே கூட ஸ்டெர்லைட் ஆலையை எடுத்து நடத்துங்கள் என தமிழக அரசுக்கு யோசனை வழங்கினர். ஆனால் அதற்கும் மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, தூத்துக்குடி பகுதி மக்கள் ஆலையை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், கடந்த 2018ம் ஆண்டைப் போல் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடக்க விரும்பவில்லை என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.