எச்சரிக்கை, இது இந்துக்கள் வசிக்கும் பகுதி, அவர்கள் உள்ளேவர தடை.. கோவை மாவட்டத்தில் மதவெறி பலகையால் பரபரப்பு.
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இது இந்துக்கள் பகுதி என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பலகைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இது இந்துக்கள் பகுதி என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பலகைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அன்னனூர் செல்லும் சாலையில் காடுவெட்டி பாளையம் என்ற கிராமத்தில்தான் இந்த சர்ச்சைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்படும் வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளது, குறிப்பாக இஸ்லாமியர்களை குறிவைத்து ஆங்காங்கே தாக்குதல்கள் நடந்து வருகிறது, பசுவின் பெயரால் இஸ்லாமியர்கள் அடித்துக் கொலை செய்யப்படுவது, மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது கும்பல் தாக்குதல் நடந்து வருகிறது. பெரும்பாலும் வட இந்தியாவில் அரங்கேறி வந்த இதுபோன்ற வன்முறைகள் தற்போது தமிழகத்திற்கும் எட்ட தொடங்கியுள்ளது.
குறிப்பாக பாஜக வாக்கு வங்கி அதிகம் உள்ள பகுதி என்று அறியப்படும் கோவையில் தற்போது ஆங்காங்கே சிறுபான்மையினர் வெறுப்பு சம்பவங்கள் தலைதூக்க தொடங்கியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் காடுவெட்டி பாளையம் என்ற கிராமம் உள்ளது, அந்த கிராமத்தின் நுழைவாயிலில் இது இந்துக்கள் பகுதி, இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி, மதப்பிரச்சாரம் செய்யவோ, மத கூட்டங்கள் நடத்தவோ அனுமதி இல்லை, எச்சரிக்கை மீறினால் தண்டிக்கப்படுவீர்கள் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை பலகை மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது, இந்த பலகை குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த பலகை காவி மற்றும் மஞ்சள் நிறத்தில் பொறிக்கப்பட்டுள்ளது, இந்த பலகையில் காடுவெட்டிபாளையம் ஊர் பொதுமக்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது,
குறிப்பாக இந்து மக்களை மதமாற்றம் வகையில் கிருத்துவ மத அமைப்புகள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற நாடு அனைத்து சமூகத்தினரும் சகோதரர்களாக வாழவேண்டிய தேசத்தில் இதுபோல மதத்தை பிரித்து அடையாளப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த பலகையை உடனே அகற்ற வேண்டும், இது போன்ற செயலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.