மாற்றத்தை எதிர்பார்த்தாங்க... ஏமாற்றமே மிச்சம்... மு.க. ஸ்டாலின் அரசின் பட்ஜெட் குறித்து கமலின் பஞ்ச்.!
மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசின் 2021-22-க்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரியில் நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்த நிலையில் எஞ்சிய 6 மாதங்களுக்கான பட்ஜெட்டை திமுக அரசு இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். தேர்தல் அறிக்கையில் திமுக பல வாக்குறுதிகளை அளித்திருந்த நிலையில், இந்த பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
பட்ஜெட்டில், தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற 2,756 கோடி ரூபாய் கடனும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.