வன்னியர்கள் மீது வன்மம்... கசடுகள் நிறைந்த கண்ணீரை வடித்து காசு பார்க்கும் சூர்யா... அதிரடி குற்றச்சாட்டு..!
அவலங்களைக் கூவிக் கூவி விற்பனை செய்கிற இந்த வணிகத்திற்கு இப்போது பலியாகி இருப்பவர்கள், நமது தமிழ் நாட்டின் செஞ்சி வட்டாரப் பழங்குடி மக்களான இருளர்கள்!
ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை வேண்டுமென்றே வன்மைக்காரர்களாக சித்தரித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர், ஜெயபாஸ்கரன் தனது கருத்துக்களை காட்டமாக பதிவு செய்திருக்கிறார். அதில், ‘’வணக்கம் நண்பர்களே! 'ஜெய்பீம்'- என்ற ஒரு திரைப்படத்தைப் பார்த்தேன்! திரைப்படம் என்கிற ஒரு மாபெரும் காட்சி ஊடகம், சமூக நல்லிணக்கத்திற்கும், உண்மைகளுக்கும் முற்றிலும் எதிராக, சிலரது இழிவான நோக்கங்களுக்குப் பயன்படுத்த ப்பட்டிருக்கின்ற அவலத்தை, அந்தத் திரைப்படம் எனக்கு மிகத் தெளிவாக உணர்த்தியது!
அந்தத் திரைப்படக் கதையின் முதன்மையான களங்களாக, தமிழ் நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வட்டாரப் பகுதிகள் படம்பிடிக்கப் பட்டுள்ளன! அந்தத் திரைப்படத்தின் கதை, இதுதான்: மலைவாழ் பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன்,அந்த ஊர்ப் பெரிய மனிதர் வீட்டு நகையைத் திருடிவிட்டான் என்ற ஐயத்தின் பேரில், காவல் நிலையத்தில் மிகக் கொடூரமான முறையில் அடித்துச் சித்திரவதை செய்து கொல்லப்படுகிறான்.
அப்படிக் கொல்லப் பட்டவனின் நிறைமாதத் தாய்மை கொண்ட மனைவியையும், ஒரு பெண் பிள்ளையையும் பாதுகாத்து, கடுமையான சட்டப் போராட்டத்தின் வாயிலாக அவர்களுக்கான நீதியை நிலைநாட்டுகிறார், கதாநாயகன் சூர்யா! நடிகர்களான ஜோதிகா-சூர்யா ஆகிய இணையர், இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தை, த.செ. ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார்! த.செ.ஞானவேல் என்பவர், ஒரு முன்னாள் பத்திரிகையாளர் ஆவார்! 'ஒத்தையடிப் பாதை' என்ற தலைப்பில், தமிழ் நாட்டின் முதல் தலைமுறை ஆளுமைகளை நேர்காணல் செய்து, அவற்றையெல்லாம் ஒரு தொடராக எழுதியவர் அவர்!
இப்போது யாரோ சிலருக்கு செய்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி, அவர்களுக்கு மனநிறைவைத் தரும் பொருட்டு, அவர் எடுத்திருக்கும் 'இயக்குனர்' என்ற இந்த அவதாரம், இப்போது அலங்கோலமாகியிருக்கிறது! இத்திரைப்படம்,புத்தம் புதியதோர் 'கலைசீற்றம்' அல்ல! இது போன்ற, இதைவிடச் சிறந்த, 'விசாரணை' போன்ற பல திரைப்படங்கள் ஏற்கனவே ஏராளமாக வந்துவிட்டன! இதுவும் ஒரு வகையான,சமூக அக்கறை என்ற முகமூடி தரித்த காட்சி ஊடகப் பெருவணிகம் என்பதை, இப்படம் வெளியான ஓ.டி.டி. தளத்தின் வாயிலாக நாம் உணரலாம்!
அவலங்களைக் கூவிக் கூவி விற்பனை செய்கிற இந்த வணிகத்திற்கு இப்போது பலியாகி இருப்பவர்கள், நமது தமிழ் நாட்டின் செஞ்சி வட்டாரப் பழங்குடி மக்களான இருளர்கள்! நமது நாட்டில் பல்வேறு வகையில் அவல வாழ்க்கை வாழுகின்ற பாவப்பட்ட மனிதர்கள், தங்களின் வாழ்நிலையை மாற்றவேண்டி, நமது அரசுகளிடம் உண்மையான கோரிக்கை மனுக்களைக் கும்பிட்டுக் கொடுத்தால், அந்த மனுக்கள் அலட்சியப்படுத்தப் படுகின்றன, அல்லது கிழித்தெறியப் படுகின்றன! அப்படிப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகளுக்காகவும், அவர்கள் மீது அதிகார வர்க்கத்தினர் சிலர் நடத்துகின்ற கொடூரங்களுக்கு நீதி கேட்டும், எவ்விதமான பயன்களையும் எதிர்பாராமல் களத்தில் இறங்கிப் போராடுகிற மனித உரிமைக் களப்போராளிகள், அரசு மற்றும் காவல் துறையினரின் கடுமையான அடக்குமுறைகளும், தாக்குதல்களுக்கும், பொருந்தாத வழக்குகளுக்கும் உள்ளாகித் துன்புறுகிறார்கள்!ஆனால் அதே கோரிக்கைகள், கதாபாத்திரங்கள் கதறக் கதற ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டால்,அந்தத் திரைப்படத்திற்கு மத்திய மாநில அரசுகளின் விருதுகள் வழங்கப்படுகின்றன!
இது ஒரு வினோதமான நகைமுரண் அல்லது நமது நாட்டின் நெடுங்காலக் காட்சி ஊடகக் கலாசாரக் கோட்பாடு என்று நாம் கருதலாம்!
அந்த வகையில், இந்த மேற்படி திரைப்படத்தின் பல்வேறு வகையான தொழில் நுட்பக் கூறுகளுக்கும், அதில் துருத்திக் கொண்டு தொங்குகிற சமூக அக்கறைக்கும், சில விருதுகள் வழங்கப்படக் கூடும். உரியவர்கள் அவ்விருதுகளைப் பெற்றுக் கொள்ளட்டும். அதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை!
ஆனால், காவல் துறை சார்ந்த லாக்கப் மரணங்கள்,பாலியல் வன் கொடுமைகள்,பொய் வழக்குகள்,பொய் சாட்சியங்கள் போன்றவற்றையெல்லாம், இது போன்ற திரைப்படங்கள் எந்த வகையில் தடுத்து நிறுத்துகின்றன? மட்டுப் படுத்துகின்றன? அல்லது தொடர்புடைய அதிகார வர்க்கத்தின் மன நிலையில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன? என்பதே தற்போதைய நமது கேள்வியாகும்!
வரலாறு நெடுகிலும் சரிசெய்யப்படாமல் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இது போன்ற சில அதிகார வர்க்கத்தினரின் பெருங்குற்றங்களை நீடிக்க விட்டு விட்டு, அவற்றைக் குறித்த திரைப்படங்களை மட்டும் வரிசை வரிசையாக எடுத்துத் தள்ளி, அவற்றுக்கான விருதுகளை வாங்கிக் குவிப்பது கூட, ஒரு வகையில் குரூரமான வன்முறைதான்!
மனசாட்சியோடு செயல்படுகின்ற பெரும்பகுதி காவல் துறையினருக்கும், நமது வெகுமக்களுக்கும் இடையே மனப்பிளவையும் கசப்புணர்வையும் ஏற்படுத்தியதைத் தவிர, இதுபோன்ற திரைப்படங்கள் வேறு எதையும் சாதிக்கவில்லை என்பதே பெருங்கசப்பான உண்மை!
தளி- கல்பனா சுமதி,சிதம்பரம் பத்மினி போன்று, சில காவல் துறையினர் நடத்திய முந்தைய பல கொடூரங்களைக் கடந்து,1995 -ஆம் ஆண்டுக்குப் பிறகும் மிகக் கொடூரமான பல அதிகார வெறியாட்டங்கள் நமது தமிழ் நாட்டில் நிகழ்த்தப் பட்டுள்ளன!
மிகவும் அண்மையில் கூட, சாத்தான்குளம் சாத்தான்குளம் சம்பவம் நடந்திருக்கிறது. இவற்றையெல்லாம் ஒரு கள்ள மௌனத்தோடு கடந்து, 1990-களின் முற்பகுதியில் நடந்த ஒர் அதிகார அவலத்தை இந்தப் படக்குழுவினர் தூசி தட்டி எடுத்துத் திரைப்படமாக்கி, கசடுகள் நிறைந்த தங்களது கண்ணீரை வடிக்க வேண்டிய காரணம் என்ன? 'எதைத் தேர்வு செய்து படமெடுக்க வேண்டும் என்பது படைப்பாளியின் உரிமை!' என்று இதற்கு விடை சொல்லப்படும் என்றால், இப்படிக் கேட்பதற்குப் பார்வையாளர் தரப்புக்கும் முழு உரிமை உண்டு என்பதே இதற்கான அழுத்தந்திருத்தமான விடையாகும்! அந்த இரண்டரை மணி நேர மொத்தத் திரைப்படத்திலும், ஏறக்குறைய ஒரு மணி நேரம் லாக்கப் சித்திரவதைக் காட்சிகள் விலாவரியாகவும் மிகவும் கொடூரமான முறைகளிலும காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.
ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை தெருத் தெருவாக ஓடவிட்டும் உருளவிட்டும் காட்சிப்படுத்துகிற இழிவான, குரூரமான, வணிகத் தந்திரங்கள் நிறைந்த வன்மம், இத்திரைப்படத்தில் நிறையவே அரங்கேறியிருக்கிறது!உலகின் எந்த நாட்டின் திரைப்படத்திலும் இப்படியான கொடூரக் காட்சிகள் இடம் பெற்று நாம் பார்த்ததில்லை, ஒருவேளை அப்படியே இருந்தாலும் அது இவ்வளவு நீளமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை!
இது போன்ற காட்சிகளை வெறும் நடிப்பாகப் பார்க்க வேண்டும் என்று எந்த மேதையும் சொல்லக் கூடாது! அது போன்ற காட்சிகளில் நடிப்பவர்களுக்கும், அப்படி நடிக்க வைப்பவர்களுக்கும் மட்டும் தான் அது நடிப்பு! பின்னணி இசையோடும், ரத்தமும் சதையுமான 'டப்பிங்' தொழில் நுட்ப மரண ஓலங்களோடும் அக்காட்சிகளைக் காண்பவர்களுக்கு, மிகவும் குறிப்பாகப் பெண்களுக்கு அவை மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்ற வாதைகளாக மாறுகின்றன!
ரஷ்யாவில் ஒரு பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பில், குழந்தைகள் இறந்து கிடக்கும் காட்சிப் படங்களை,'இஸ்வெஸ்தா' என்ற பத்திரிகை வெளியிட்டபோது, அப்பத்திரிகையின் பங்குதாரர்களே கூட்டமாகச் சென்று அந்தப் பத்திரிகை அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள்! 'இப்படியெல்லாம் செய்திகளைப் போட்டால் தான் விற்பனையில் லாபம் கிடைக்கும் என்று நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டபோது,அந்த அவல வருவாய் எங்களுக்குத் தேவையே இல்லை என்று அந்தப் பங்குதாரர்கள் சொல்லிவிட்டார்கள்!
உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல்களில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் புகைப்படங்களில், எவர் ஒருவரின் படத்தையும் அந்நாட்டின் பத்திரிகைகள் வெளியிடவில்லை! அதற்குக் காரணம்,ஊடக அறம்,ஊடக நாகரிகம்! இங்கே பெரும்பாலும் அப்படியெல்லாம் ஒரு கோட்பாடும் கிடையாது என்பதையே, மேற்படி திரைப்படமும் நமக்கு உறுதியாக மெய்ப்பித்திருக்கிறது!
சரி! இந்தப் படத்தின் குழுவினர் ஏன் அப்படிச் செய்திருக்கிறார்கள்?அதுதான் வன்மம்! நிராயுதபாணிகளாகக் கிடந்து, ஒவ்வொரு வேளை உணவுக்கும் அல்லாடிச் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது விழிப்புணர்வு பெற்று நிமிர்ந்திருக்கின்ற ஒரு தனிப்பெரும் சமூகத்திற்கு எதிரான ஒரு பெரு வன்மம்! அந்த வன்மம் தான், தொன்னூறுகளின் தொடக்கக் காலச் சம்பவத்தை தூசி தட்டிக் கையிலெடுத்துக் கதறக் கதற இப்போது காட்சிகளாகக் காட்டி இருக்கிறது!
அந்த வன்மம் தான், 'அந்தோணிசாமி' என்கிற அந்த உண்மையான உதவி ஆய்வாளரின் பெயரை மறைத்து, 'குருமூர்த்தி' என்று தங்களுக்குக் கசக்கிற ஒரு பெயரைச் சூட்டியிருக்கிறது! அந்த வன்மம் தான், நீதிமன்றத்தில், 'குருமூர்த்தி' என்று கதாபாத்திரத்தின் முழுப்பெயரைச் சொல்லாமல்,மூச்சுக்கு முப்பது முறை,குரு....குரு என்று உரக்கச்சொல்லி அந்தக் கதாபாத்திரதத்துக்கு எதிராக வாதிடுகிறது! அந்த வன்மம் தான், தான் செய்த லாக்கப் கொலையை மறைக்க தன் வீட்டிலிருந்து அந்த உதவி ஆய்வாளர் உத்தரவிடும் போது, அவருக்குப் பின்புலமாக வன்னியர் சங்கச் சின்னம் பொறித்த காலண்டரை படம் பார்க்கின்ற பார்வையாளர்களுக்குத் தெளிவாகக் காட்டுகிறது!
அந்த வன்மம் தான், சாத்தான்குளம், தளி, சிதம்பரம், வாச்சாத்தி போன்ற பல ஊர்களில் நடந்த,'நியாயங்களை' விட்டு விட்டு விழுப்புரத்தில் நடந்த ஒரு அநியாயத்தைக் கையில் எடுத்துத் திரைப்படமாக்கித் 'துட்டு' சம்பாதித்துக் கொண்டிருக்கிறது! அந்த வன்மம் தான்,'அந்த உதவி ஆய்வாளர் உள்ளூரில் சாதிச் செல்வாக்கும்,அதிகாரமும்,பணபலமும் படைத்தவர்' என்று உயர் அதிகாரிகள் பாத்திரங்களிடையே வசனம் பேச வைக்கிறது!
இங்கே இன்னொரு முதன்மையான செய்தியைக் குறிப்பிட்டாக வேண்டும்! கொஞ்ச காலத்திற்கு முன்பு, இன்றைய, 'ஜெய்பீம்' நாயகன் இதே சூர்யா நடித்த 'சிங்கம்' என்ற ஒரு திரைப்படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தில், 'டேய் என்னை யாருன்னு நெனச்சே? என் கார் மேல கையவச்சதுமே என் மாமன்,மச்சான்,சித்தப்பன்,பெரியப்பன் அப்படீன்னு சுத்துவட்டாரத்துல இருக்கிற ஆயிரக்கணக்கான ஜனங்க இங்க வந்து நிக்கறாங்களே பாத்தியா? இப்ப நான் ஒரு வார்த்தை சொன்னாப் போதும்..இப்பவே என் உறவுக் காரன் அத்தனைப் பேரும் சேர்ந்துகிட்டு உன்னை உண்டு இல்லைன்னு பீஸ் பீஸாக்கிடுவாங்க!'
என்று, பெருங்குரலில் வெடித்து வில்லன் பிரகாஷ் ராஜ் முன்பாக வசனம் பேசுவார்! உறவுக் கூட்டம் என்று அவர் சொல்வது கதைப்படி அவரது ஜாதிக்காரக் கூட்டம்! ஓர் அரசாங்கத்தின் காவல் ஆய்வாளர் இப்படியா பேசுவார்? இப்படியான வெட்கங்கெட்ட ஜாதிப் பீற்றலுக்கு எதிராக எவருமே சினங்கொண்டு சீறிப் பாயவில்லையே ஏன்?
இதையே பாதிக்கப்பட்டவர்கள் எங்காவது கூட்டங்களில் பேசிவிட்டால் அத்தனை வழக்குகளும் அவர்களின் மீது பாய்கின்றன! சகலவிதமான சுதந்திரங்களையும் ஒட்டுமொத்தமாகப் பெற்றிருக்கிறதா நமது தமிழ் சினிமா? இப்போது இந்தப் படத்தில், அதே சூர்யா அதே பிரகாஷ்ராஜ் அவர்களிடம், 'அந்த உதவி ஆய்வாளர் உள்ளூரில் சாதிச் செல்வாக்கும், அதிகாரபலமும்,பண பலமும் உடையவன்' என்று வசனம் பேசுகிறாரே.. இது எந்த ஊடக நியாயம்?
ஒரு காவல்துறை அதிகாரியாக ஜாதிப்பெருமை பேசலாம்! ஆனால், ஒரு வழக்கறிஞராக ஜாதிக்கு எதிராகப் பேசவேண்டுமோ? என்ன கொடுமை 'சரவணா'இது? எழுதிக் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? இந்தப் படத்தில், லாக்கப்பில் ஓர் அப்பாவியைப் படுகொலை செய்கிற உதவி ஆய்வாளர், குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்று வரையறை செய்து, மறைமுகமாக அதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துகின்ற ஒரு அயோக்கியத்தனம், எதன் பொருட்டு வெளிப்படுத்தப் படுகிறது?
மேலும், கடுகளவுகூட அது உண்மையும் அல்லவே! அந்தக் காலக் கட்டத்தில், அப்போது பாதிக்கப்பட்ட அந்த பழங்குடி மக்களுக்காக வாதாடியும், போராடியும் நீதியை நிலை நாட்டியவர்கள், இவர்கள் எந்தச் சமூகத்தை வன்முறைச் சமூகமாகச் சித்தரிக்கிறார்களோ, அந்தச் சமூகத்தின் வழக்கறிஞர்கள் தான் என்றுதானே இப்போது செய்திகள் வெளிவருகின்றன!
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகப்பெருமளவில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குள் கொம்பு சீவிவிட்டு மோதல்களை உருவாக்கிக் குளிர் காய்கிற 'விஷமிகள்' பெருகி வருகிறார்கள்! இதுதான், நமது நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்தின் பெருந்துயரம்!
என்ன நடந்தது? என்று என் மதிப்பிற்குரிய மானுட உரிமைப் போராளி ஐயா கல்யாணி அவர்களிடம் தொலைபேசியில் கேட்டேன்! 'இருளர் இன மக்கள் தொடர்பாக சில கருத்துகளை என்னிடம் கேட்டார்கள். சொன்னேன். அதைத் தாண்டி அந்தப் படம் எப்படியிருக்கிறது என்று இன்னும் நான் பார்க்கவில்லை என்று தெளிவாகச் சொன்னார், ஐயா கல்யாணி அவர்கள்!
'ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள். இந்த வட்டார வழக்கு மொழிநடையைச் சொன்னேன்.ஆனால் அந்தப் படத்தில் இப்படியெல்லாம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை!' என்று சொல்லி வருந்தியிருக்கிறார், எழுத்தாளர் கண்மணி குணசேகரன்! இயக்குனர் தங்கர்பச்சான் இந்தத் திரைப்படத்தைப் பாராட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள். அவரது கருத்தை உண்மையின் கருத்தாக நாம் ஏற்கத் தேவையில்லை! அது அவரது விருப்பம்!
நாம் கேட்பதெல்லாம் ஒரே ஒரு கேள்விதான்! ஒருவன் குற்றவாளி என்று நிறுவ நினைத்தால், அதற்கான சான்றுகளைத்தான் காட்டவேண்டுமே தவிர, உண்மைகளுக்கு முற்றிலும் எதிராக அவனது சாதியைக் காட்டுவது என்பது, மிகவும் முற்றிய மனநோயன்றி வேறென்ன?
என்றைக்காவது இவர்கள் தாழ்த்தப்பட்ட, மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், அவர்கள் ஒற்றுமையாகக் கைகோத்துக் கொண்டு தங்களது வாழ்வுரிமைகளுக்காகப் போராட வேண்டிய அவசியத்தையும் கருப்பொருளாகக் கொண்டு வலியுறுத்தி, இவர்களில் யாராவது, எப்போதாவது ஒரு திரைப்படம் எடுத்தது உண்டா? பின்தங்கிக் கிடக்கின்ற மக்களுக்குள் பிளவையும், பிரிவையும், பேதங்களையும் ஏற்படுத்திக் குளிர் காய்வதற்காக, எழுதுகோலையும் கேமராவையும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவர்கள் பயன்படுத்துவார்கள்?
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அதை உறுதி செய்து காட்டும் வகையில் மருத்துவர் அய்யா ச.இராமதாசு அவர்கள், தமிழ் நாட்டில் 120- ஊர்களில் 'ஒரு தாய் மக்கள் மாநாடு' நடத்தியதைப் பற்றியும், அவர்கள் அனைவரது வாழ்வுரிமைகளுக்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி அவற்றில் பெற்ற வெற்றிகளைப் பற்றியும் சில'ஞான' சூனியங்களுக்கு ஏதாவது தெரியுமா?
ஒன்றை மட்டும் தெளிவு படுத்துகிறோம்! எச்சரிக்கையும் செய்கிறோம்! தர்மத்தின் வாழ்வுதனை, சில கேமராக்களும், சில எழுது கோல்களும், அவ்வப்போது 'கவ்வும்'! ஆனால், வெகுவிரைவில் வரலாற்றின் விசாரணையில், அவையனைத்தும் மண்ணைக் 'கவ்வும்'!’’ என அவர் தெரிவித்துள்ளார்.