ராசா பேசுறத பேசிட்டு போறாரு.. நான் இப்போ எதுவும் சொல்ல விரும்பல.. பொறுத்திருந்து பாருங்க!! கெத்து காட்டும் வினோத் ராய்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ.ராசா இருந்தார். அப்போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி வரையில் இழப்பீடு ஏற்பட்டதாக அப்போதைய தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய் அறிக்கை அளித்தார்.
இதையடுத்து 2ஜி ஊழல் என்பது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்தது. கடந்த 7 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் விசாரணையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2ஜி வழக்கை ஆரம்பத்தில் விசாரித்தது போல் சிபிஐ விசாரிக்கவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களுடன் நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது. சிபிஐ இந்த வழக்கை அலட்சியமாக கையாண்டது என கூறி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதையடுத்து 2ஜி வழக்கு தொடர்பாக ஆ.ராசா எழுதிய புத்தகம் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில், 2ஜி ஒதுக்கீடில் முறைகேடு நடந்ததாக அறிக்கை அளித்த அப்போதைய தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராயை காண்டிராக்ட் கில்லர் என ஆ.ராசா விமர்சித்துள்ளார். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வீழ்த்த பயன்படுத்தப்பட்ட சதி என்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக வினோத் ராயை விசாரிக்க வேண்டும் எனவும் ராசா கூறியுள்ளார்.
ஆனால், ஆ.ராசாவின் குற்றச்சாட்டுக்கு வினோத் ராய் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதுதொடர்பாக வினோத் ராயிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆ.ராசாவின் குற்றச்சாட்டு, 2ஜி வழக்கு தீர்ப்பு, சிபிஐ விசாரணை ஆகியவை குறித்து நான் எதுவும் பேசவில்லை. இதற்கு காரணம் உள்ளது. அதனை நீங்கள் நேரம் வரும்போது தெரிந்து கொள்வீர்கள் என வினோத் ராய் பதிலளித்தார்.
ஆ.ராசாவின் கருத்துக்கு முன்னாள் சிஏஜி இயக்குநர் சின்ஹா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.