அவரின் பெயரை உச்சரிப்பதற்கு கூட தகுதி இல்லாதவர் சி.வி சண்முகம். இப்படிப்பட்ட நிலையில் அவர் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முதல்வர் ஸ்டாலின் மீது சுமத்திக் கொண்டு இருக்கிறார். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மக்கள் முன்னால் அமைச்சர் சி.வி சண்முகத்தின் டவுசரை கழட்டினார்கள் ஆனாலும் அவர் அடங்க வில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் விமர்சித்துள்ளார்.ஆனால் சட்டமன்றத்தில் தோல்வியடைந்த சி.வி சண்முகம் அரசு அதிகாரிகளை சட்டையை கழட்டினேன் என மிரட்டுகிறார் என்றும் அவர் கிண்டல் செய்துள்ளார். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் அப்போது இன்று ரெய்டில் ஈடுபட்டுவரும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் சட்டையை நாங்கள் கழட்டுவோம் என முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எச்சரித்த நிலையில். லட்சுமணன் இவ்வாறு பதலடி கொடுத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எதிராக பாஜக அதிமுக ஆகிய கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. தேர்தல் நேரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்றும், பாஜக தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான அரசை விமர்சித்து வருகிறது. அதே நேரத்தில் எதிர்க் கட்சியான அதிமுகவும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ். பி வேலுமணி, கே.சி வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடரந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலகங்களிலும், அவருக்கு சொந்தமான 62 இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசின் இந்த தொடர் நடவடிக்கையால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான மாநிலத்தில் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மறுவாழ்வு வழங்கிட வேண்டும், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதேபோல் விழுப்புரத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்று 7 மாதங்கள் ஆகிவிட்டது, ஆனால் இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதே மர்மமாக உள்ளது. அதேபோல காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது.லஞ்ச ஒழிப்பு துறை என்ற பெயரில் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். யார் லஞ்ச ஒழிப்பு துறையினர்? நேற்று வரை காவல்துறையில் இருந்தவர்கள்தான், திருடர்களிடம் காசு வாங்கியவர்கள்தான், காவலர்களாக இருந்தபோது சட்டத்திற்கு புறம்பாக செயல்களில் ஈடுபட்டவர்கள்தான், அது போன்றவர்கள் தான் இப்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையில் இருப்பவர்கள் எல்லாரும் உத்தமர்களா? இவர்கள் எல்லாம் என்ன காந்திக்கு பக்கத்து வீட்டுக்காரர்களா? இவர்களெல்லாம் லஞ்சம் வாங்காதவர்களா? யாரிடமும் கைநீட்டி காசு வாங்காதவர்களா? இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றுகிற உயர் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை யாரும் கை நீட்டாதவர்கள் அல்ல. அவர்கள் கட்டிய வீடு எங்கிருந்து வந்தது? லஞ்ச ஒழிப்பு துறையில் இருப்பவர்களின் சொத்து எவ்வளவு? லஞ்ச ஒழிப்பு துறைக்கு அதிகாரியாக வருவதற்கு முன் அவர்கள் டிஎஸ்பியாக இருந்தபோது, எஸ்பி ஆக இருந்தபோது அவர்களின் சொத்து மதிப்பு என்ன? 

அதேபோல அவர்கள் இந்தப் பணியை முடித்து விட்டு போகும் போது அவர்களுடைய சொத்து மதிப்பு என்ன? இதையெல்லாம் நாங்களும் கேட்போம். ஆட்சி இப்படியே இருந்து விடாது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வரும், அப்போது இதே லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ளவர்களின் வீடுதேடி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை வரும். அப்போது நாங்களும் கிரிப்டோகரன்சி என்று எழுதுவோம். அப்போது நாங்களும் உன் சட்டையை கிழிப்போம். ஆட்சி என்பது நிரந்தரம் இல்லை, காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறேன் என அவர் பேசியிருந்தார். இந்நிலையில் சிவி சண்முகத்தின் இந்த பேச்சை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 15 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் கலந்து கொண்டார். இதில் அரசு அதிகாரிகள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அரசு அதிகாரிகளை சட்டையை கழட்டுவேன் என மிரட்டும் தொனியில் பேசி வருகிறாரே என செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எம்எல்ஏ லட்சுமணன், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இந்திய துணைக்கண்டத்தின் மிகச் சிறந்த தலைவராக இருந்து கொண்டிருக்கிறார். அவரின் பெயரை உச்சரிப்பதற்கு கூட தகுதி இல்லாதவர் சி.வி சண்முகம். இப்படிப்பட்ட நிலையில் அவர் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முதல்வர் ஸ்டாலின் மீது சுமத்திக் கொண்டு இருக்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால் சூரியனைப் பார்த்து ஏதோ... என்று சொல்வார்களே அப்படி இருக்கிறது. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அவர்களை விமர்சனம் செய்து வந்ததன் எதிரொலியாக, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மக்கள் சி.வி சண்முகத்தின் டவுசரை கழட்டினார்கள். ஆனால் சி.வி சண்முகம் அரசு அதிகாரிகளின் டவுசரை கட்டுவதாக கூறிக்கொண்டு வருகிறார் என கிண்டல் செய்தார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.