"எனது கருத்தை தமிழக காங். தலைவர் புரிந்து கொண்டுள்ளார்" - விஜயதரணி ஆவேசம்!!
அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம் அளித்துள்ளார். எனது கருத்தை மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் புரிந்து கொண்டுள்ளார் என்று விஜயதரணி கூறியுள்ளார்.
தினகரனை, நேற்று முன்தினம், காங்., - எம்.எல்.ஏ., விஜயதாரணி சென்னையில் சந்தித்தார். தினகரன் மாமியார் இறந்தது தொடர்பாக துக்கம் விசாரிக்க சென்றதாக, விஜயதாரணி தெரிவித்தார். அப்போது, 'அ.தி.மு.க.,வினர் ஒன்றுபட்டு செயல்பட்டால் தான், அக்கட்சியை காப்பாற்ற முடியும்' என்றும், கருத்து தெரிவித்தார். இதற்கு, குமரி மாவட்ட காங்., - எம்.எல்.ஏ.,க்கள், பிரின்ஸ், ராஜேஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், 'துக்கம் விசாரித்த விஜயதாரணி, தினகரன் தலைமையை, பழனிசாமியும், பன்னீர் செல்வமும் ஆதரிக்க வேண்டும் என்ற தொனியில் பேசியிருக்க கூடாது; அவர் மீது காங்., தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து விஜயதாரணி கூறியதாவது: ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத பா.ஜ., தமிழக சட்டசபையை கட்டுப்படுத்துகிறது; அதன் மூலம், அ.தி.மு.க.,வை அழிக்க பார்க்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., கட்சிகளை அழித்து விட்டு ஆட்சியை பிடிக்க, பா.ஜ., துடிக்கிறது. எனது கருத்தை, மாநில தலைவர் திருநாவுக்கரசர் புரிந்து கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.