கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நான் இடம் தருகிறேன்..! விஜயகாந்த் அறிவிப்பு..!
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் ஒரு நாள் நிச்சயமாக இறக்கத்தான் போகிறார்கள். இப்படியிருக்கும்போது மருத்துவத் துறையை தேர்ந்தெடுத்து மக்களுக்கு சேவை செய்த ஒரு மருத்துவருக்கு இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலையை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமை சிகிச்சையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே கொரோனா பாதிப்பிற்கு தாக்கு பிடிக்க முடியாமல் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சில பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. நேற்று சென்னையில் மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகி விட அவரது உடலை அண்ணாநகர் வேலங்காடு பகுதியில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தனது கல்லூரியின் ஒரு பகுதியை ஒதுக்கி தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் ஒரு நாள் நிச்சயமாக இறக்கத்தான் போகிறார்கள். இப்படியிருக்கும்போது மருத்துவத் துறையை தேர்ந்தெடுத்து மக்களுக்கு சேவை செய்த ஒரு மருத்துவருக்கு இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலையை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். கால்நடைகள் இறந்தால் அதை மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்து உரிய மரியாதை செலுத்தி வரும் தமிழக மக்கள் தற்போது மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
உடலை அடக்கம் செய்தால் எந்த தொற்றும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனமும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் தவறாக புரிந்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அடிப்பதும் ஓட்டுநர் உள்பட மற்றவர்களை தாக்குவதும் கண்டனத்துக்குரியது. மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து இதுபோன்ற செயலில் இனிமேல் யாரும் ஈடுபட வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் உடலை அடக்கம் செய்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்கு தமிழக அரசு புரியவைக்க வேண்டும். கடவுளுக்கு அடுத்தபடியாக நாம் கருதுவது மருத்துவர்களை தான். ஆனால் மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.