இளைஞர் அணி தலைவராகும் விஜய பிரபாகரன்!! தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்...
சமீபகாலமாக நடைபெற்றுவரும் கட்சி நிகழ்ச்சிகள், ஆலோசனைக் கூட்டங்களில் தீவிரமாகக் கலந்துகொண்டு வரும் பிரபாகரனுக்கு, 2019ஆம் ஆண்டில் இளைஞர் அணி பதவி வழங்கப்படும் என்று சொல்கிறார்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள். மேலும், தேமுதிகவிலிருந்து சுதீஷ் ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார். அவருடன் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் இளைய மகன் சண்முக பாண்டியனும் சென்றுள்ளனர்.
அமெரிக்கா செல்வதற்கு முன்பு விஜயகாந்த் குடும்பத்தினர் கட்சியைப் பற்றி ஆலோசனை செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த விஜய பிரபாகரனையும் அமெரிக்காவுக்கு அழைத்துள்ளனர். ஆனால், “நாம் சென்றுவிட்டால் நிர்வாகிகள் சோர்ந்துவிடுவார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்து கட்சி பணியைத் தீவிரப்படுத்தி, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை நான் இருந்து கவனித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய பிரபாகரன்.
அப்பாவை அமெரிக்காவிற்கு அனுப்பிவிட்டு நேராக கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜயபிரபாகரன், நேற்றே அதற்கான பணிகளையும் தொடங்கியிருக்கிறார். பிரபாகரன் ஆலோசனைப்படி, பூத் கமிட்டி அமைத்து அதன் விவரங்களைத் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத, விஜய பிரபாகரனின் செல்வாக்கு கட்சியில் ஓங்கியுள்ளது. மேலும் அவர் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்தே கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 14ஆம் தேதிக்குப் பிறகு கூடிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், அனைவரும் கோரஸாக தம்பிக்கு சின்ன கேப்டனுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்க வேண்டும். அதுவும் இளைஞர் அணி கொடுத்தால் சிறப்பாக இருக்கும். அண்மையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சுதீஷ், விஜய பிரபாகரன் மற்றும் மூத்த நிர்வாகிகள் சென்றபோது கூட கட்சி நிர்வாகிகள் அனைவரும் பிரபாகரன் பின்னால் அணிவகுத்ததால், அப்போதே சுதீஷ் பின்வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள் மூத்த நிர்வாகிகள். இதனால்
விஜய் பிரபாகரன் பிறந்த நாளான டிசம்பர் 13ஆம் தேதி காலை முதலே சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் தமிழகம் முழுவதிலிமிருந்தும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர் பிறந்த நாளுக்கு வந்தவர்கள் அனைவரும் தலைவர் வாழ்க சின்ன கேப்டன் வாழ்க என்று முழக்கமிட்டுள்ளனர். விஜயகாந்த் பிறந்தநாளைப்போல கோவில்களில் அபிஷேகம் கொடுத்தும், அன்னதானம் வழங்கியும் பிரியாணி, கேக், வாட்டர் பாட்டில் என தேமுதிக தொண்டர்கள் ரணகளப்படுத்தினர்.