ஒத்த சீட்டுக்காக இப்படி விழணுமா திருமா? ஸ்டாலின் என்ன பெரிய கலைஞரா! விடுதலை சிறுத்தைகளிடம் கொந்தளித்த கூட்டணி தலைவர்கள்?
மறைந்த கருணாநிதியின் படத்தை அதில் வைத்திருந்தாலும் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டோம்! இவருக்கு சனாதன பயங்கரவாதம் பற்றி என்ன தெரியும்? ஸ்டாலின் நம் கூட்டணி தலைவர்தான். ஆனால் நாற்பதில் அவர் ஒவ்வொருவருக்கும் ஒதுக்க இருப்பது சொற்ப தொகுதிகளே. அதிலும் உங்கள் கட்சிக்கு ஒன்றுதான் கிடைக்கும்.
விடுதலை சிறுத்தைகள் பெரிதாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம்!’ மாநாடு ஒருவழியாய் இன்று திருச்சியில் நடக்கிறது. தனது வாக்கு வங்கியையும், தனது அரசியல் செல்வாக்கையும் இதன் மூலம் நிரூபிக்க துடிக்கிறார் திருமா. இதற்காக ராகுலை அழைத்து வந்து கெத்து காட்டலாம் என்று நினைத்தவருக்கு அது வாய்க்கவில்லை.
எனவே மாநில அளவில் தி.மு.க., காங்கிரஸ் தலைவர்களை அழைத்திருக்கிறார். ஏற்கனவே திருமா தரப்போடு வைகோ தரப்புக்கு பெரும் மோதல் உருவாகி சமீபமாகத்தான் அது சாந்தமானது. இந்நிலையில் இந்த மாநாட்டை ஒட்டி திருமாவளவன் மீது ஒட்டுமொத்த ஸ்டாலின் தவிர்த்து கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் கடும் கோபம் என்று தகவல்.
காரணம்?...இந்த மாநாடு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விளம்பரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்க இருக்கும் கட்சிகளின் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் மற்ற அனைத்து தலைவர்களின் படங்களை விடவும் ஸ்டாலினின் படம் நான்கு மடங்கு பெரிதாக போடப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்ட்டின் தேசிய தலைவர்களுக்குப் பிறகுதான் தமிழக கட்சிகளின் தலைவர்கள் வருகிறார்கள்.
நாராயணசாமிக்கு பின் தான் திருநாவுக்கரசர் வருகிறார். இவர்கள் எல்லோரையும் தாண்டி வீரமணிக்கு பிறகுதான் வைகோவின் படமே இருக்கிறது. இதில்தான் அத்தனை கூட்டணி கட்சி தலைவர்களும் கடும் கடுப்பில் இருக்கிறார்களாம். நாராயணசாமிக்கு பிறகு நானா? என்று அரசரும், காங்கிரஸ் வீரமணியை விட என் வீச்சு குறைவா? என வைகோவும் பெரிய கடுப்பில் தங்களுக்குள் புகைவது, திருமாவிற்கு மிக நெருக்கமான விடுதலை சிறுத்தைகள் புள்ளிகளை அழைத்துப் பேசி கோபத்தை வெளியிடுவதுமாக இருக்கிறார்களாம்.
அப்போது “அதென்ன ஸ்டாலினின் படம் மட்டும் அவ்வளவு பெரிதாக? மற்ற தலைவர்களை விட அவர் அவ்வளவு பெரிய அரசியல் ஆளுமையா என்ன? மறைந்த கருணாநிதியின் படத்தை அதில் வைத்திருந்தாலும் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டோம்! இவருக்கு சனாதன பயங்கரவாதம் பற்றி என்ன தெரியும்? ஸ்டாலின் நம் கூட்டணி தலைவர்தான். ஆனால் நாற்பதில் அவர் ஒவ்வொருவருக்கும் ஒதுக்க இருப்பது சொற்ப தொகுதிகளே. அதிலும் உங்கள் கட்சிக்கு ஒன்றுதான் கிடைக்கும்.
அதற்காகவா அவரை இப்படி கூல் செய்ய வேண்டும்? எங்களை அசிங்கப்படுத்திவிட்டீர்கள்.” என்று கொதித்திருக்கின்றனர். உடனே அந்த நிர்வாகிகளும் ‘அண்ணே! தலைவரே!’ என்று பேசி சமாதானம் செய்திருக்கின்றனர். கூடவே திருமாவின் கவனத்துக்கும் அதை கொண்டு செல்ல, அவர் பதறிப்போய் ஒவ்வொரு தலைவருக்கும் போன் போட்டு “நான் மாநாட்டு வேலையில பிஸியா இருந்துட்டேன். என்ன நடந்திருக்குதுன்னு புரியலை. கவனிக்குறேன்!” என்றாராம். அதேபோல் காமராஜர், பெரியார் என்று பெரும் தலைவர்கள் வரிசையில் அண்ணாவின் படம் இல்லாததை திராவிட கட்சிகள் ஒரு சேர விமர்சிக்கின்றன. ஹும் வெளங்கிடும்.