எல்லாத்தையும் அரசியல் பண்ணுனா எப்படி..ஆனால்..! இதற்காக முதலமைச்சருக்கு பாராட்டு..வானதி தடாலடி..
வ.உ. சிதம்பரனார், வேலுநாச்சியார் போன்ற விடுதலைப் போராட்ட தலைவர்களின் வீர வரலாற்றையும், அவர்களின் கருத்துக்களையும் மக்களிடம் கொண்டுச் சேர்க்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள முயற்சிகளை வரவேற்பதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது.மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும் வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியார், பாரதியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக்கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்பட்டது. இதற்கு தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கப்பதற்கு நிராகரிப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. எனவே பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைதொடர்ந்து மத்திய அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் இடம்பெறும் எனவும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் இந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என அறிக்கை மூலமாக தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சினிவாசன் டெல்லியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன.கொரோனா கட்டுப்பாடுகள், பாதுகாப்பு காரணம், பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளை முடிப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பாஜக ஆளும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் அலங்கார ஊர்திக்கு விண்ணப்பித்து இருந்தாலும் 12 ஊர்திகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதனையும் மத்திய அரசு தேர்வு செய்யவில்லை. அதற்கென அமைக்கப்பட்ட நிபுணர் குழுவே தேர்வு செய்துள்ளது. இந்த உண்மைகளை மறைத்து, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியின் ஒரு பகுதியாக திமுக அரசின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. இருந்தாலும், சுதந்திரப் போராட்ட வீரர்களை மக்களிடம் கொண்டுச் சேர்க்கும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம். இந்த அலங்கார ஊர்தியை குக்கிராமங்கள் வரை கொண்டுச் செல்ல வேண்டும்.
வ.உ. சிதம்பரனார், வேலுநாச்சியார் போன்ற விடுதலைப் போராட்ட தலைவர்களின் வீர வரலாற்றையும், அவர்களின் தேசியம், தெய்வீகம் தாங்கிய கருத்துக்களையும் மக்களிடம் கொண்டுச் சேர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள முயற்சிகளை வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். தமிழகத்திலிருந்து இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களை நினைவு கூரும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு அலங்கார ஊர்தியை, தமிழக அரசு ஏற்பாடு செய்து, மாநிலம் முழுவதும் வலம் வரச் செய்ய வேண்டும் என்றும் இந்த நேரத்தில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.