முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்வில் பல போராட்டங்களைச் சந்தித்து வென்று வந்துள்ளார். அதேபோல், உடல்நிலை பாதிப்பான இந்த போராட்டத்தையும் அவர் சந்தித்து வெல்லுவார் என்று அப்போலோவில் முதலமைச்சர் உடல்நிலை விசாரித்து விட்டு வந்த கவிஞர் வைரமுத்து உருக்கமுடன் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப். 22 ஆம் தேதி உடல்நலக் குறைவால் ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்டு, எய்ம்ஸ் மருத்துவர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதில், முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று வருகிறார். முதலமைச்சர் நலமடைய வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் சர்வமதத்தினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை அனைவராலும் பூஜிக்கப்படுகின்ற ஒரு ஸ்தலம் போல் மாற்றப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை வாயிலில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினம்தோறும் பூஜை நடந்து வருகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாவைக் காண ஏராளமான மத்திய அமைச்சர்கள், தமிழகத்தில் உள்ள ஒரு சில எதிர்கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளின்
தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் தினம் தினம் வந்து பார்த்து உடல் நலத்தை விசாரித்து விட்டு செல்கின்றனர். இன்று பிரபல பாலடாசிரியர்
கவிப்பேரரசு வைரமுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை வந்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா மிக தைரியமானவர். அவர் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். கலைத்துறையில், அரசியலில் பல போராட்டங்களை சந்தித்து வென்று சாதித்து காட்டியுள்ளார். அவர், தற்போது உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. அதிலிருந்து மீண்டுதான் அவர் இந்த நிலையை அடைந்துள்ளார். அதேபோல் தனது உடல்நிலை பாதிப்பில் இருந்தும் மீண்டு வருவார். உடல்பலம், மனோபலம், மருத்துவபலம் என அனைத்து துணையினாலும் அவர் மீண்டு வருவார்.
இவ்வாறு வைரமுத்து கூறினார்.
