Vaiko Organize Kerala youth who were injured in a car accident

கார் விபத்தில் படுகாயம் அடைந்த கேரள வாலிபருக்கு சிகிச்சை மதிமுக பொதுசெயலாளர் வைகோ ஏற்பாடு செய்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்று (7.6.2018) பிற்பகல் 2 மணி அளவில்,கோவை மதுக்கரை அருகில் பாலக்காடு நெடுஞ்சாலையில், கேரளத்தில் இருந்து வந்த ஒரு கார் லாரியில் மோதி, சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த இளைஞரை, அப்பகுதி வாழ் இளைஞர்கள், காரில் இருந்து வெளியே எடுத்து, 108 ஆம்புலன்சுக்குத் தொடர்பு கொண்டு வரவழைத்து, மனிதாபிமானத்துடன் செயல்பட்டனர்.

அதேநேரத்தில் அந்த வழியாக வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கோவை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.ஆர். மோகன்குமார், இளைஞர் அணிச் செயலாளர் ஈஸ்வரன், மாவட்டத் துணைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் அந்த இளைஞரை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு உதவினர்.

அந்த இளைஞர் படுகாயம் அடைந்ததால், உடல் முழுவம் ரத்தம் கொட்டிக் கொண்டு இருந்தது. அவருடன் வைகோ பேச முயன்றார். அந்த இளைஞர் லேசாகத் தலையை மட்டும் அசைத்தார்.

கோவை அரசு மருத்துவமனை இயக்குநரிடம் வைகோ அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, விபத்து குறித்த தகவலைச் சொல்லி, அந்த இளைஞருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். உடனடியாக ஏற்பாடு செய்கிறேன் என இயக்குநர் தெரிவித்தார். இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.