புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்….சபாநாயகர் வைத்திலிங்கம் அதிரடி ராஜினாமா ...
புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் வைத்திலிங்ககம் இன்று இரவு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரில் போட்டியிடுவதற்கு ஏதுவாக அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெறவிருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் போட்டியிடுகின்றது. புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவிக்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியது.
இந்நிலையில் தற்போது வைத்திலிங்கம் அவரது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதாக துணை சபாநாயகருக்கு கடிதம் அளித்துள்ளார். ஆகவே அவர் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.