uttarpradesh election result
ஓட்டு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே உத்தரப்பிரதேசத்தில் சொல்லி கில்லி அடிக்க ஆரம்பித்துள்ளது பா.ஜ.க.

நேதாஜி என அழைக்கப்பட்ட முலாயம்சிங் யாதவின் மருமகளே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளது சமாஜ்வாதி கட்சியினரை அதிர்ச்சியில், ஆழ்த்தியுள்ளது.
முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகனின் மனைவி அபர்ணா யாதவ், லக்னோ கான்ட் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வேட்பாளரை விட முதல் சுற்றிலேயே 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி விட்டார். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அபர்ணா பின்னடைவையே சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

கோவாவை பொறுத்தவரை லஷ்மிகாந்த் பர்சேகர் ஆளும் பா.ஜ.க அரசின் முதல் அமைச்சராக உள்ளார். இவர் மந்தேராம் தொகுதியில் போட்டியிட்டார். கோவா மாநில முதல் அமைச்சரே தற்போது தோல்வியடைந்தார். உ.பி.,கோவா இப்படி என்றால் பஞ்சாப்பில் காங்கிரஸ் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இதே போல மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் மகன் முன்னிலை வகித்து வருகிறார்.காஸியாபாத் தொகுதியில் பா.ஜ.க.வின், பிரபலமான அதுல்கார்க் பின்னடைவை சந்தித்துள்ளார்.

அனைத்தையும் விட அதிர்ச்சி அளிக்கும் வகையில் முலாயம் சிங் யாதவின் அன்புத் தம்பியும் அகிலேஷ் யாதவின் அரசியல் எதிரியுமான ஷிவ்பால் யாதவ் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். இவர் சஷ்வந்த் நகர் தொகுதியில் போட்டியிட்டார்.

அலகாபாத் தொகுதியில் களம் கண்ட பா.ஜ.க. வேட்பாளர் சித்தார் நாத் சிங் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். பிரபல தொழில் அதிபரான குன்வர் சித்தின் பிரசாத் காங்கிரஸ் சார்பில் களம் கண்டு பின் தங்கி இருக்கிறார்.
