25  ஆண்டுகளாக அடுத்தவர்கள் காலைப் பிடித்து  காலம் கடத்திய காரியக்காரர்' என நடிகர் ரஜினிகாந்த்தை திமுக  இளைஞரணி செயலர் உதயநிதி  கடுமையாக விமர்சனம் செய்துள்ளது ரஜினி ரசிகர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.. 

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த துக்ளக் இதழின் 50ம் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்று பேசினார். அப்போது 'முரசொலி பத்திரிகையை ஒருவர் வைத்திருந்தால் அவரை தி.மு.க.,காரர் என்பர். ஆனால் துக்ளக் இதழை வைத்திருப்பவரை அறிவாளி என்பர் என கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காலம் கெட்டு போச்சு அரசியல் கெட்டு போச்சு சமுதாயமும் ரொம்ப கெட்டுப் போச்சு' எனக் கூறியிருந்தார். ரஜினியின் இந்த பேச்சை விமர்சித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகனும் கட்சியின் இளைஞரணி செயலருமான உதயநிதி டுவிட்டரில் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

அதில் உள்ள கருத்துகள் ரஜினியின் சினிமா மற்றும் அரசியல் வாழ்வை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு ரஜினி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உதயநிதி தனது டுவிட்டர் பதிவில், முதல்வர்னா முத்தமிழ் அறிஞர், தலைவர்னா புரட்சித்தலைவர், தைரியலெட்சுமின்னா அம்மா' என்று -கால் நுாற்றாண்டாக கால் பிடித்து காலம் கடத்தி 'தலை சுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில் முரசொலியை கையிலேந்தி பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே தி.மு.க.காரன். நான் தி.மு.க. காரன்; பொங்கல் வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.


ஏற்கனவே திமுக நடத்திய குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணியின் போது 'வயதானவர்களை வீட்டிலேயே விட்டு வருமாறு ரஜினியை மறைமுகமாக உதயநிதி விமர்சனம் செய்திருந்தார். தற்போது மீண்டும் ரஜினியுடன் மோதலை ஆரம்பித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த விமர்சனம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.