சோதனை மேல் சோதனை... இரட்டை இலை வழக்கில் தினகரனுக்கு முற்றும் நெருக்கடி!
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டுள்ளது. ஆகையால் டிடிவி.தினகரன் மீது டிசம்பர் 10-ல் குற்றச்சாட்டு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டுள்ளது. ஆகையால் டிடிவி.தினகரன் மீது டிசம்பர் 10-ல் குற்றச்சாட்டு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. டிடிவி.தினகரன் மீதான குற்றத்துக்கு ஆதாரம் உள்ளது என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுகவில் சசிகலா தலைமையை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம் தரம் யுத்தம் நடத்தினார். அந்த சமயத்தில் ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுக கட்சியின் பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அதிரடியாக முடக்கியது.
பணப்பட்டுவாடா புகாரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிக்கையில் டிடிவி தினகரன் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் 2-வது குற்றப்பத்திரிக்கையில் அவர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
குற்றப்பத்திரிக்கையில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். போலீசாரின் குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தினகரனின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இரட்டை இலை சின்னம்பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிசம்பர் 4-ம் ஆஜராக டிடிவி தினகரனுக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் இருந்து நத்துசிங், லலித்குமார், குல்பித்குந்த்ரா உட்பட 5 பேரை டெல்லி சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என நீதிமன்றம் கூறியுள்ளது.