"ஆதரவு எம்எல்ஏக்களுடன் தினகரன் தீவிர ஆலோசனை" - எடப்பாடி அணிக்கு அடுத்த செக் என்ன...?
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று மாலை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரன், விரைவில் அமைச்சர்களுக்கு மூக்கனாங்கயிறு போடப்படும் என தெரிவித்தார்.
இதைதொடர்ந்து மதுரை, ஒத்தக்கடை நான்கு வழி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில், தனது ஆதரவு எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம், ரங்கசாமி, உமா மகேஸ்வரி, சாத்தூர் சுப்பிரமணியன், கென்னடி மாரியப்பன், கரூர் தங்கதுரை, ஜக்கையன், கதிர்காமு, பரமக்குடி முத்தையா, வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், இன்று மாலை நடக்கும் கூட்டத்துக்கு அதிமுகவில் உள்ள அனைத்து எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி யார் கலந்து கொள்வார்கள் என்றும், அவர்களை வரவேற்பது குறித்து விவாதித்தனர் என கூறப்படுகிறது.
குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின், தீர்மானத்தை ரத்து செய்வது, இரட்டை இலை சின்னத்தை மீட்க தங்களது ஆதரவாளர்களை அணி திரட்டுவது, உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.