எம்எல்ஏக்கள் ஆதரவை வைத்து ஒன்றும் செய்ய முடியாது… தொண்டர்கள் ஆதரவுதான் வேண்டும்..எடப்பாடியை கலாய்த்த டிடிவி..
சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் செய்துவிட முடியாது என்றும் தொண்டர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் டி.டி.வி தினகரன் தலைமையில் நடந்தது. இதில் பேசிய தினகரன் நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுகவை தயார் வேண்டிய கடமை எனக்கு உள்ளது என்று கூறினார்.
இன்று கட்சியில் பெரிய பதவியில் இருப்பவர்கள் பலரை அறிமுகப்படுத்தியவன் தான்தான் என்று தெரிவித்த தினகரன்,. ஜெயலலிதாவுடன் 1987ம் ஆண்டில் இருந்தே கட்சியில் இருந்து வருகிறேன என்றும், 2000ம் ஆண்டில் எங்களை தமிழம் முழுவதும் சுற்றுப் பயணம் அனுப்பியவர் ஜெயலலிதா என்றும் கூறினார்.
பதவிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் அல்ல என்றும் சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா மறைந்த அன்றே முதலமைச்சர் ஆகியிருப்பார் என்றும் தினகரன் குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர், 30 பேர் தலைமைச் செயலகத்தில் இருந்துகொண்டு ஆட்சி நடத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காட்டிய வழியை பின்பற்ற வேண்டும். தலைமைக் கழகத்தின் கதவுகளை மூடிக்கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் செய்துவிட முடியாது. தொண்டர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்று தெரிவித்த டி.டி.வி.தினகரன் ஆட்சியில் உள்ளவர்களின் தலைக்கணத்தை இறங்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது என குறிப்பிட்டார்.