ttv dinakaran planning to give hats for rk nagar people
பாஜக பக்கவாட்டில் அடித்தாலும், தேர்தல் ஆணையம் திருப்பி அடித்தாலும், எதற்கும் கலங்கப் போவதில்லை என்று கூறும் தினகரன், தேர்தல் நின்றாலும், ஆர்.கே.நகரில் உள்ள அனைவருக்கும் தொப்பி வழங்க ஏற்பாடு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு, இடைத்தேர்தல் ரத்து என பாஜக வால் என்னென்ன செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்யட்டும், அதை எதிர்கொள்ள தயார் என்றே, தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார் தினகரன்.

எப்படியாவது ஜெயித்து விடுவேன் என்ற அச்சம் காரணமாகவே, பாஜக தேர்தலை நிறுத்தி உள்ளது என்று அவர் கூறினாலும், அடுத்தடுத்த வேலைகளை நிறுத்தப்போவதில்லை என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் தொப்பி சின்னம் மக்கள் மத்தியில் நன்றாக பதிவாகி விட்டதால், இனி எப்போது ஆர்.கே.நகருக்கு தேர்தல் வந்தாலும், இரட்டை இலை கிடைக்காத பட்சத்தில், தொப்பி சின்னமே இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
எனவே, ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், அனைவரது வீட்டுக்கும் தொப்பி போய் சேரவேண்டும் என்று, 3 லட்சம் தொப்பிக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல்.

அதுவும், தொப்பிகள் அனைத்தும் வெயில் காலத்திற்காக, தொண்டு நிறுவனங்கள் மூலமாக ஆர்.கே.நகர் மக்களுக்கு வழங்கவும் தினகரன் ஏற்பாடு செய்துள்ளாராம்.
ஆர்.கே.நகரில் தொப்பி இல்லாத மனிதர்களின் நடமாட்டத்தை பார்க்க கூடாது என்றும், தமது ஆதரவாளர்களுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
