ஜீயர் ரௌடி போல நடந்து கொள்ளக்கூடாது… சடகோப ராமானுஜருக்கு அதிர்ச்சி கொடுத்த டி.டி.வி. !!
எங்களுக்கும் கல் எறியத் தெரியும், சோடா பாட்டில் வீசத் தெரியும் என ரௌடி போல ஜீயர் பேசக்கூடாது என்றும், ஒரு ஆன்மீகவாதி போல் நடந்து கொள்ள வேண்டும் என்று ஜீயர் சடகோ ராமானுஜருக்கு டி.டி.வி.தினகரன் கண்டணம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வைரமுத்துவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர், ஆண்டாளை அவமதித்த கவிஞர் வைரமுத்து வரும் 3 ஆம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.
சாமியார்கள் என்றால் ஒன்றும் செய்ய மாட்டார்க்ள் என்று நினைக்க வேண்டாம் என்றும் தொடா்ந்து இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை யாராவது பேசினால் நாங்களும் சோடா பாட்டில் வீச தயங்க மாட்டோம் என்று பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் ஜீயருக்கு டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டாள் குறித்து தவறான விமர்சனம் செய்தவர்களை கண்டிக்கிறோம் என்ற பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேசியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சராசரி மனிதர்களுக்கும் ஜீயர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசமே வன்முறைகளற்ற சாத்வீகமும் கருணை உள்ளமும் கொண்ட ஆன்மீக பணிகளும்தான் என தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த வேறுபாட்டைத் தகர்த்து அதன்மூலம் ஆன்மீகத்திற்கே அவப்பெயர் உண்டாக்கும் வகையில் எங்களுக்கும் கல் எறியத் தெரியும்… எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என்றெல்லாம் பேச்சளவிற்குகூட ஒரு ஜீயர் ஸ்தானத்தில் இருப்பவர் பேசுவது ஏற்புடையதல்ல என்றும் அந்த பேச்சு கண்டிக்கத்தகது என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்