அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவு… போராட்டத்தில் குதிக்க போக்குவரத்து தொழிலாளர்கள் அதிரடி முடிவு !!
தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போர்ட்டம் நடத்தி வரும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக, போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று முடிவு செய்ய உள்ளனர். தலைமைச் செயலாக ஊழியர்களும் அரசு ஊழியர்களுடன் இணைவது குறித்து இன்று முடிவு செய்ய உள்ளனர்.
பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, கடந்த 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் தீவிரமாக தொடர்வதால், அரசு பள்ளிகள் மற்றும் பல்வேறு துறைகளில், கல்வி கற்பித்தல் மற்றும் அரசு நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது. இன்று முதல் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளன.
இந்நிலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச் செயலர் பத்மநாபன் பேசும் போது, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்கள் முழு ஆதரவை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
அவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்க ஆர்ப்பாட்டம் தர்ணா போராட்டங்கள் நடத்தவுள்ளோம். அதுமட்டுமின்றி, காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து இன்று சென்னை எச்.எம்.எஸ்., அலுவலகத்தில் நடக்கும் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
இதே போல் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.