"சிலைய பார்க்கும்போதே தெரியுது நடப்பது அம்மா ஆட்சி இல்லன்றது!" டி.ஆர். அதிரடி!
அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெ. சிலையை மாற்றுவதற்கு முன்பு, இப்படி ஒரு சிலை அமைத்த அமைச்சர்களின் நிலையை மாற்ற வேண்டும் என்று டி.ராஜேந்தர் கூறினார்.
லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ரஜினி, கமல் என்று யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவரவருக்கு உள்ள ஆயிரம் கனவுகளால்தான் இந்த அரசியல் வரவு உள்ளது. அதனால் ஏற்படும் விளைவுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசியல் என்பது சாதாரண விஷயமல்ல. அது மிகவும் கஷ்டமானது.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையை மாற்றுவதற்கு முன்பாக, அவருக்கு இப்படி ஒரு சிலையை அமைத்த இந்த ஆட்சியில் உள்ள அமைச்சர்களின் நிலையை மாற்ற வேண்டும். ஜெயலலிதாவின் உருவம், உள்ளம், கம்பீரத்தை மறந்து அமைக்கப்பட்டுள்ள அந்த சிலையை பார்க்கவே வேதனையாக உள்ளது. இதன் மூலமே தற்போது நடப்பது அம்மா ஆட்சி இல்லை என்பது தெரிகிறது.
இரட்டை இலை இருந்தும் ஆர்.கே.நகரில் தோல்வியடைந்தது இவர்களால்தான். ஜெயலலிதா உருவாக்கி தந்த ஆட்சி தற்போது பினாமி ஆட்சியாக நடந்து வருகிறது. காவிரி பிரச்சனைக்காக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திற்கு லட்சிய தி.மு.க.விற்கு அழைப்பில்லை. ஏற்கனவே, கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அனைத்து கட்சி கூட்டங்களில் லட்சிய தி.மு.க. பங்கேற்றது. ஆனால் ஆர்.கே.நகர் பிரசாரத்திற்கு
செல்லவில்லை என்பதற்காக எனக்கு அழைப்பில்லை. மக்களுக்கே இந்த ஆட்சி மீது நம்பிக்கையில்லை. இவர்கள் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை. மற்றவர்களுக்கு பல்லாக்கு தூக்கும் இந்த ஆட்சிக்கு நான் எப்படி ஆதரவு கொடுக்க முடியும்.
தமிழகத்தில் உதித்து இந்தியா முழுவதும் மின்னிய நடிகை ஸ்ரீதேவி மரணம் இந்திய திரையுலகிற்கே பேரிழப்பாகும். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறினார்.