Top 10 Constituencies with High Female Voters in Tamil Nadu : தமிழக அரசியல் களத்தில் மகளிர் வாக்கு வங்கி என்பது வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக உள்ளது. பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள, தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கக்கூடிய 10 முக்கியமான தொகுதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
மகளிர் வாக்கு அதிகம் உள்ள 10 தொகுதிகள்
தமிழக அரசியல் களத்தில் பெண்களின் வாக்கு வங்கியை குறிவைத்து அரசியல் கட்சிகள் பல திட்டங்களை முன்னெடுப்பது வழக்கம். 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்றவற்றின் மூலம் பெண் வாக்காளர்கள் மத்தியில் நற்பெயரை உருவாக்கி வைத்துள்ளது.
சமீபத்திய வாக்காளர் பட்டியலின் படி தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள, தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கக்கூடிய 10 தொகுதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
சோழிங்கநல்லூர்
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி விளங்கி வருகிறது. இங்கு மூன்று லட்சத்து 30 ஆயிரம் பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். இங்கு பணிபுரியும் பெண்கள் மற்றும் குடும்ப தலைவிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் மகளிர் வாக்குகளை கவர திமுக அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
கன்னியாகுமரி
தமிழகத்தில் மகளிர் வாக்குகள் அதிகம் கொண்ட தொகுதியாக கன்னியாகுமரி தொகுதி விளங்கி வருகிறது. இங்கு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் வாக்காளர்கள் உள்ளனர். கன்னியாகுமரி படித்த பெண்கள் அதிகம் உள்ள மாவட்டமாகும். மேலும் மகளிர் உரிமைத் தொகை, இலவச விடியல் பயணம் ஆகியவை இங்கு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவுண்டம்பாளையம்
கவுண்டம்பாளையம் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு உள்ள பெண்களின் வாக்கு வங்கி தேர்தல் முடிவை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. கோவை மாவட்டம் பொதுவாக அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்டாலும், மகளிர் நல திட்டங்களால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு சாதகமான சூழல் ஏற்படும் நிலைமை உள்ளது.
ஸ்ரீரங்கம்
திருச்சி மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக ஸ்ரீரங்கம் தொகுதி விளங்கி வருகிறது. இங்கு ஆண் வாக்காளர்களை காட்டிலும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். பாரம்பரியமாக அதிமுக பலமாக இருந்த தொகுதி என்றாலும் கடந்த தேர்தலில் திமுகவின் கை ஓங்கியது. இந்த முறையும் மகளிர் வாக்குகள் திமுக பக்கம் சாயும் பட்சத்தில் ஸ்ரீரங்கம் தொகுதியை திமுக கைப்பற்றும் என்பது அரசியல் வல்லுனர்களின் கணிப்பாக இருக்கிறது.
ஆவடி
சென்னை புறநகர் பகுதிகளில் அதிக பெண் வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக ஆவடி தொகுதி விளங்கி வருகிறது. கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சாமுவேல் நாசர் வெற்றி பெற்றார். அரசுப் பேருந்துகளில் இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம், தோழி விடுதிகள் போன்ற திட்டங்கள் இத்தொகுதி பெண்களுக்கு நேரடி பலனை அளித்துள்ளதால் இந்த தொகுதி திமுக கைவசம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி மேற்கு
திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு தொகுதி திமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. அமைச்சர் கே என் நேரு போட்டியிடும் இந்த தொகுதியில் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. திமுகவின் மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் என்று பெயரில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையும் கே.என் நேரு திருச்சி மேற்கு தொகுதியில் வெல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் அமைச்சர் கீதா ஜீவன் வெற்றி பெற்ற தொகுதியாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் வாக்காளர்களே தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். தென்தமிழகத்தில் திமுகவின் செல்வாக்கை நிலை நிறுத்த இத்தொகுதி முக்கியமாக உள்ளது. மேலும் திமுகவின் கனிமொழி தூத்துக்குடியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக கைவசம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரவாயல்
சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய மதுரவாயல் தொகுதியில் நடுத்தர மற்றும் ஏழைப்பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். திமுக அறிமுகப்படுத்திய சமூக நலத்திட்டங்கள் இவர்களை நேரடியாக சென்றடைந்துள்ளன. எனவே மகளிர் வாக்குகள் திமுகவிற்கு கிடைக்கும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கணக்கு போட்டு வருகின்றனர்.
சேலம் வடக்கு
அதிமுகவின் கோட்டையாக சேலம் வடக்கு இருந்து வருகிறது. இங்கு பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். திமுக அரசு கொண்டு வந்த மகளிர் நிலத்தட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைந்துள்ளது. மேலும் மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி போன்ற திட்டங்கள் மூலமாக சேலம் வடக்கு பகுதியில் திமுக முன்னேறி செல்கிறது.
ஆர்.கே நகர்
சென்னையின் மிக முக்கிய தொகுதியான ஆர்கேநகர் பகுதியில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை மிக அதிகம். மகளிர் உரிமைத்தொகை மற்றும் இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் இத்தொகுதியில் திமுகவிற்கு பெரும் ஆதரவை உருவாக்கி வருகின்றன. மேலும் ஆர்கே நகர் தொகுதியில் வாழும் நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அவர்களை திமுக நோக்கி கவனத்தை திருப்பச் செய்துள்ளது.


