good judgment will come to Tamil Nadu tomorrow - Chief Minister Edappadi Palanisamy
சேலம்
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக நாளை தமிழகத்துக்கு ஒரு நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11-ஆம் தேதி சேலம் வந்தார். அவர் 12-ஆம் தேதி ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
நேற்று முன்தினம் ஏ.வி.ஆர். ரவுண்டானா உயர் மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் ஈரோடு மாவட்டம், பவானியில் நடந்த விழாவில் அவர், பங்கேற்றுவிட்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் தங்கினார்.
இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை அவரது வீட்டில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, குறைகளை கேட்டறிந்தார். மக்கள் வரிசையில் நின்று அவரிடம் மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து திருப்பதிக்கு தனது குடும்பத்தினருடன் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்,
அதில், "காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்து இருக்கிறது. அதில் மத்திய அரசு சில யோசனைகள் அடிப்படையில் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி நாளை (புதன் கிழமை) தமிழகத்துக்கு ஒரு நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டத்தின் மூலமாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதால் இறுதி தீர்ப்பு வழங்கக்கூடிய நிலை வந்துள்ளது. இதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
தமிழக அரசை பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர்முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக உள்ளது.” என்று அவர் கூறினார்.
